Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 9 பேர் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலத்தின் மக்கள் தொகை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது நோயின் தீவிரம், மாநிலத்தின் பயன்பாட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தது.
டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஷாக் தகவல்..!
தமிழ்நாட்டில் இன்று 5,755 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 32,051 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 47,318 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 8,132 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 23,75,963 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்பு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் துணிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இன்று 4,458 பேருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தில் இன்று 4,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். 6,313 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 96.7% ஆக உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 96.7% ஆக உள்ளது. மே 7ஆம் தேதிக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 30.79 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் கோயில்களை திறக்கக்கோரி மனு
கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை மற்றும் கோயில்களை திறக்கக் கோரி மனுத் தாக்கல். ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் விசாரிக்கிறது.
இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி
நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டத்தில் 48 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழ்நாட்டில் 9 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது
சென்னை மாவட்டத்தில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 31,143 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிந்தைய உபாதைகள்
சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 4ல் ஒருவருக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல் தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம், தூக்கமின்மை உள்ளிட்ட உபாதைகளை எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது
4816 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை (Active Cases) 50,000க்கும் குறைவாக உள்ளது. இதில்,16,000க்கும் (32% நோயாளிகள்) மேற்பட்ட நோயாளிகள் நிமோனியா போன்ற தீவிர பாதிப்புக்கு சிகிச்சைப பெற்று வருகின்றனர். 4816 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
சென்னை புறநகர் ரயில்களில் அனைத்து தரப்பினரும் இன்று முதல் அனுமதி
சென்னை புறநகர் ரயில்களில் அனைத்து தரப்பினரும் இன்று முதல் பயணம் மேற்கொள்ள சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை களைய வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்
30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
மொத்தம் 40,45,516 முகாம்களில் 30,16,26,028 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 64,89,599 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
தொடர்ந்து 43-ஆவது நாளாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 51,659 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 43-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 96.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை போட்டுக் கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு 23.06.2021 மற்றும் 24.06.2021 ஆகிய இரு நாட்களுக்கு மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாட்களில் 8,880 நபர்கள் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி பயனடைந்துள்ளனர்.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு மேலும் இரண்டு நாட்களுக்கு (25.06.2021826.06.2021) நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.