கணவனை இழந்த பெண்:


மேற்குவங்கத்தை சேர்ந்த நந்திதா சர்கார் என்பவரது கணவர் கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அடுத்த நாளே அவரிடமிருந்து சீதன பொருட்கள், விலையுயர்ந்த நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை, கணவர் வீட்டு தரப்பினர் பறித்துக் கொண்டுள்ளனர். அதோடு, வெத்து பத்திரங்களில் கையெழுத்திட்டு மகள் நந்திதாவை அழைத்து செல்லுங்கள் என அவரது பெற்றோரையும்,  சம்மந்தி வீட்டு தரப்பினர் வற்புறுத்தியுள்ளனர்.


நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்பு:


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹவுரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நந்திதா சர்க்கார் PWDV சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, கணவர் வீட்டு தரப்பில் இருந்து தனக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட கோரினார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  நந்திதா சர்காருக்கு இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து, அந்த பெண்ணின் மாமியர் வீட்டு தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.


உயர்நீதிமன்றத்தை நாடிய பெண்:


இதையடுத்து நந்திதா சர்கார் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு நீதிபதி சுபேந்து சமந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் கணவருடன் வசித்து வந்த வீட்டிலிருந்த பொருட்கள், தான் அணிந்திருந்த ஆபரணங்கள் என அனைத்தும், மாமியர் வீட்டு தரப்பினர் பறித்துக்கொண்டனர். பல முறை கேட்டும் அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை.  கணவர் இறப்புச் சான்றிதழின் நகலை கூட மாமியார் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.


கணவர் வீட்டு தரப்பு வாதம்:


அதேசமயம்,  PWDV சட்டத்தின் விதிகளின்படி, மருமகளுக்கு அவரது மாமனாரிடம் இருந்து எந்தவிதமான பராமரிப்பு வழங்க கோரவும்  உரிமை இல்லை என, கணவர் வீட்டு தரப்பினர் வாதிட்டனர். கணவரின் மீதுள்ள சொத்துக்கள் மீது மட்டுமே, இந்து திருமணசட்டப்படி ஒரு விதவைப் பெண்ணால் உரிமை கோர முடியும் எனவும், மாமியர்-மாமனாரின் சொத்துக்கள் மீது உரிமை கோர முடியாது என்றும் வலியுறுத்தினர்.


நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு பெண்ணின் பொருளாதார மற்றும் நிதி ஆதாரங்களை பறிக்கும் எந்தவொரு செயலும், குடும்ப வன்முறையாகவே கருதப்படும். அந்த வகையில் நந்திதா சர்கார் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கான நிதி ஆதாரங்கள் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்துள்ளது. எனவே, இதுவும் பொருளாதார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறைக்கு சமம் தான் என வலியுறுத்தினார். தொடர்ந்து, மனுதாரருக்கு நிவாரணம் வழங்க வேண்டாம் என, செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் ரத்து செய்து நீதிபதி சுபேந்து சமந்தா உத்தரவிட்டார்.