மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு முடிவுகள் சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ந்து ஆறாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  அதில், சூரத் மற்றும் நவி மும்பை ஆகிய நகரங்கள் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன.


 






'ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2022' இல் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பிரிவில், மத்தியப் பிரதேசம் முதல் இடத்தையும், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.


இந்த ஆண்டு பெரிய நகரங்கள் பிரிவில் இந்தூர் மற்றும் சூரத் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டன. அதே நேரத்தில் விஜயவாடா தனது மூன்றாவது இடத்தை நவி மும்பையிடம் இழந்தது. 100க்கும் குறைவான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் பிரிவில், திரிபுரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.


ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், மகாராஷ்டிராவின் பஞ்ச்கனி முதலிடத்திலும், சத்தீஸ்கரின் படான்  மற்றும் மகாராஷ்டிராவின் கர்ஹாத் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.


1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையில் ஹரித்வார் தூய்மையான கங்கை நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வாரணாசி மற்றும் ரிஷிகேஷ் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கங்கை நகரங்களில் பிஜ்னோர் முதல் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து, கன்னோஜ் மற்றும் கர்முக்தேஷ்வர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.


மகாராஷ்டிராவைச் சேர்ந்த தியோலாலி, நாட்டின் தூய்மையான கண்டோன்மென்ட் வாரியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பாரத திட்டம் எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கண்டறிந்து சுத்தம் மற்றும் சுகாதார அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை பட்டியலிடுவதற்காக ஸ்வச் சர்வேக்ஷன் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


கடந்த 2016ஆம் ஆண்டு முதல்முறையாக எடுக்கப்பட்ட சர்வேக்சன் கணக்கெடுப்பு 73 நகரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது, 4,354 நகரங்களில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.