பாலம் கட்டுவதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்தான் தன்னுடைய காதல்கதைக்கு மூலகாரணம் என ஒருவர் பதிவிட்ட பதிவு இணையத்தில் ஹிட் அடித்துள்ளது


வெற்றியடைந்த காதல் கதைகள் சுவாரஸ்யமானவை.ஒவ்வொருவரின் கதைகள் ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை கொண்டிருக்கின்றன. சில காதல் கதைகள் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கும் இருக்கும். அப்படியான ஒரு கதைதான் இணையத்தில் தற்போது ஹிட் அடித்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் காதல் என பெயரிடும் அளவுக்கு இந்த காதல்கதையை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.




Reddit யூசர் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவில் என்னுடைய மனைவியை நான் ஒரு போக்குவரத்து நெரிசலில்தான் கண்டுபிடித்தேன். எஜிபுரா ஓவர்பாஸ் பாலம் கட்டப்பட்ட சமயம் பெங்களூரு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்தது. நானும் என் தோழியும் போக்குவரத்தில் சிக்கினோம். நீண்டநேரம் காத்திருந்து பொறுமை இழந்த நாங்கள் இரவு சாப்பாட்டுக்காக ஒரு ஓட்டலுக்குச் சென்றோம். பின்பு நடந்தது எல்லாம் காதல்தான்.5 வருடம் அப்படியாக கடந்தது. சாதாரண நண்பர்கள் நெருக்கமான நண்பர்களானோம். பின்பு டேட்டிங். அதன்பின்னர் காதல். இப்போது திருமணமும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னமும் அந்தபாலம் வேலை முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்


இந்த ட்ராபிக் காதல் கதையை பகிர்ந்துள்ள பலரும் பாலம் வேலை முடியவில்லை என்பதை கிண்டலடித்துள்ளனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஒருவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் ஒரு காதல்கதை எனக் குறிப்பிட்டுள்ளார். பாலம் வேலை குறித்து பதிவிட்டுள்ள மற்றொருவர்  ‘ ஒரு சாலை வேலை பத்து வருடங்களுக்கு மேலாக நடக்கிறது. நான் ஸ்கூல் முடித்து, காலேஜ் முடித்து வேலைக்கும் சென்றுவிட்டேன் என நக்கலாக பதிவிட்டுள்ளார்.




அந்தக்காதல் கதை குறித்து பதிவிட்டுள்ள மற்றொருவர், இரவு சாப்பாட்டுக்குச் சென்றபிறகே இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். அன்று இரவு அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.


இது ஒரு அழகான காதல்கதையாக உள்ளது. இதனை படமாக்க பாலிவுட் யோசிக்கவேண்டும் என ட்விட்டர்வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்


பாகிஸ்தான் காதல்..


சமீபத்தில் பாகிஸ்தானின் அழகிய காதல் கதை ஒன்று  இணையத்தில் வைரலானது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் மருத்துவரான கிஷ்வர் சாஹிபா, தான் பணிபுரிந்த அதே மருத்துவமனையில் பணிபுரிந்த இளைஞர் ஹவுஸ் கீப்பிங் ஊழியரான ஷாஜத் என்பவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி திருமணமும் செய்துள்ளார். அந்நாட்டின் ஒகாரா தாலுகா திபால்பூரில் வசிக்கும் இந்த ஜோடிக்கு இடையே வேலை, படிப்பு தொடங்கி பல வித்தியாசங்கள், சமூகம் கட்டமைத்துள்ள ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதும், இவற்றையெல்லாம் தகர்த்து இருவரும் திருமணம் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். சாதாரண ஹவுஸ் கீப்பிங் பணியாளரான ஷாஜத்தை மணக்கும் அற்புதமான வாய்ப்பை தான் இழக்க விரும்பாததால் அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தியதாக மருத்துவர் கிஷ்வர்  பகிர்ந்துள்ளார்.


வகுப்பு, வர்க்கத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளும் உலகில் தன் மனைவி கிஷ்வர் அவரது இதயத்தை மட்டும் வழங்கி திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஷாஜாத் தெரிவித்துள்ளார்.


பொதுவாக மருத்துவர்களின் அறைகளை சுத்தம் செய்து தேநீர் வழங்கும் பணியை மேற்கொள்ளும் சாஜித்திடம் ஒரு நாள் கிஷ்வர் சாஜித்தின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கியதைத் தொடர்ந்து, பேசி இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.


கேலி செய்த நண்பர்கள்


ஒருகட்டத்தில் மருத்துவர் கிஷ்வர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியபோது தனக்கு காய்ச்சலே வந்துவிட்டதாகவும் ஷாஜத் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் திருமணத்திற்குப் பின் நண்பர்கள் கேலி செய்ததன் காரணமாக கிஷ்வர் தன் மருத்துவர் பணியைத் துறந்துள்ளார்.


இந்த ஜோடி தற்போது புதிதாக கிளினிக் ஒன்றைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இவர்களது காதல் கதையைப் பார்த்து இணையவாசிகள் அகமகிழ்ந்து லைக்குகளை வாரி வழங்கி நெகிழ்ச்சியுடன் காமெண்டுகள் பகிர்ந்து வருகின்றனர்.