Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation Bill Parliament: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது.

Delimitation Bill Parliament: மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றிட நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இன்று கூடும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் தேசிய அரசியலில் மிகப்பெரிய புயலாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமாக மக்களவையை விரிவுபடுத்துவது, தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் தொகுதி மறுவரையறை பணிகளை தொடங்குவது ஆகியவை முக்கிய குறிக்கோளாக உள்ளன. இவை அனைத்துமே குறிப்பிடத்தக்க தேர்தல் மற்றும் கூட்டாட்சியின் தாக்கங்களை கொண்டுள்ளன. அரசியல் சார்பு மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் குறைவாக எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. அதையும் மீறி மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
முக்கிய மசோதாக்கள் என்ன?
- சட்ட திருத்த மசோதா: தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதாக பரிந்துரைப்பதோடு, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு தொகுதி மறுவரையறை பணிகளை தொடங்குவதற்காக இந்திய அரசியலமைப்பின் 81 மற்றும் 82 பிரிவுகளை திருத்தம் செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.
- தொகுதி மறுவரையறை மசோதா: தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வதற்கான விரிவான அதிகாரங்களுடன் ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை நிறுவ முற்படுகிறது.
- யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026: உள்துறை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்படவுள்ள இத்திட்டம், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆளுகைக் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பு (திருத்த) மசோதா 131 மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா, 2026 ஆகியவற்றை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்துவார்.
தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு
மத்திய அரசு முன்னெடுத்துள்ள தொகுதி மறுவரையறை நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தொடர்ந்து, இன்று கருப்புக்கொடி ஏந்தும் போராட்டத்தையும் அறிவித்துள்ளார். தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக கூட்டணியில் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஆபத்தானது என்று வர்ணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒரு சில மாநிலங்களை மட்டுமே கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக 2029 தேர்தலுக்கு முன்னதாக தொகுதி மறுவரையறை செய்ய பாஜக முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு..
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, இந்த திருத்தம் அவசியம் என்றும் அரசு வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக, மக்களவையில் விதி 66-ஐ பயன்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவை அரசு கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.
விதி 66 சொல்வது என்ன?
மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் 66-வது விதியானது, குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்புடைய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும்போது, அவற்றின் மீதான ஒருங்கிணைந்த பரிசீலனையை நிர்வகிக்கிறது. இந்த விதியின் கீழ் அரசியலமைப்புத் திருத்தங்கள், தொகுதி வரையறை தொடர்புடைய சட்டங்களை ஒரே விவாதம் மற்றும் வாக்களிப்பு செயல்முறைக்காக ஒரே தொகுப்பாக மாற்றி, அவற்றை நிறைவேற்றுவதை நெறிப்படுத்த அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும்
அதாவது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரு சீர்திருத்தத் தொகுப்பின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு எதிராக வாக்களித்து, மற்ற பகுதிகளை ஆதரிப்பதைத் தடுத்து, ஒட்டுமொத்த சட்டத்திற்கும் ஒருமித்த கருத்தில் 'ஆம்' அல்லது 'இல்லை' என்ற முடிவை எடுக்கக் கட்டாயப்படுத்துகிறது.
சிக்கலான, ஒன்றையொன்று சார்ந்த சட்ட முன்னெடுப்புகள் ஒருங்கிணைந்து நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய அரசு தரப்பில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஒருவேளை தொகுதி மறுவரையறை மசோதா தொகுப்பிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால், பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடுட்டையும் அவர்கள் எதிர்ப்பதை போன்ற பிம்பம் உருவாகும். இதனை தங்களுக்கு சாதகமாக பாய்ன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிடுகிறதாம்.
ட்ரெண்டிங் செய்திகள்





















