பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல பஞ்சாபி பாடகரும் ராப் பாடகருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து டாக்டர் ரஞ்சீத் ராய் பேசுகையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் சித்து மூஸ் வாலா இறந்து விட்டதாகவும்,  முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார். 






சித்து மூஸ்வாலா பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மான்சா சார்பில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டில் விஜய் சிங்லாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்தார்.






கடந்த மாதம், சித்து மூஸ்வாலா தனது சமீபத்திய பாடலான 'பலி ஆடு' பாடலில் ஆம் ஆத்மி கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் குறிவைத்து சர்ச்சையை கிளப்பினார். பாடகர் தனது பாடலில் ஆம் ஆத்மி ஆதரவாளர்களை 'கதர்' (துரோகி) என்று அழைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தேராஸின் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண