சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் கல்பாவில் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 106. கடைசியாக, இமாச்சல பிரதேசத்தின் 14ஆவது சட்டப்பேரவை தேர்தலில் அவர் வாக்களித்திருந்தார். 


கடந்த 1951ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி, சுதந்திர இந்தியாவில் கல்பா வாக்குச் சாவடியில் நேகி தனது முதல் வாக்கினை செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் முதல் வாக்காளராக அவர் மாறினார். மேலும், அவர் 34வது முறையாக இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி தனது கடைசி வாக்கினை செலுத்தினார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது பாராட்டினை தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "இது பாராட்டத்தக்கது. இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெறவும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் உத்வேகமாக அமைய வேண்டும்" என பதிவிட்டிருந்தார். நவம்பர் 2ஆம் தேதி, தனது கடைசி வாக்கினை தபால் மூலம் அவர் செலுத்தியிருந்தார்.


நேகிக்கு இரங்கல் தெரிவித்துள்ள இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், "நாட்டின் முதல் வாக்காளரின் கடைசி வாக்கு நம் நினைவை எப்போதும் உணர்ச்சிவசப்படுத்தும். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரும், கின்னாரைச் சேர்ந்தவருமான ஷியாம் சரண் நேகியின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். 


 






தனது கடமையைச் செய்துகொண்டே, நவம்பர் 2ஆம் தேதி 34ஆவது முறையாக சட்டப்பேரவை தேர்தலுக்கு தபால் வாக்கினை செலுத்தினார். அவரது ஆன்மா இறைவனின் காலடியில் சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமை கிடைக்கட்டும்" என்றார்.


நேகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கின்னவுரின் துணை ஆணையர் அமந்தீப் கார்க் தெரிவித்துள்ளார்.


தலைமைத் தேர்தல் அதிகாரி மணீஷ் கார்கியும், நேகியின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். "ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவதற்காக வாக்குரிமைக்கான பயன்படுத்துவதற்கு வாக்காளர்களின் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார்" என்றார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கார்க் கூறுகையில், "நவம்பர் 2 ஆம் தேதி கல்பாவில் உள்ள தனது வீட்டில் தபால் வாக்கு மூலம் வாக்களித்த தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை வாக்களித்தார்" என்றார்.


1952 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், வாக்களித்ததால், மாஸ்டர் ஷியாம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். பனி மற்றும் வானிலையை மனதில் கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் அக்டோபர் 1951 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 1951 முதல் ஒவ்வொரு மக்களவை, சட்டப்பேரவை மற்றும் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் நேகி வாக்களித்துள்ளார்.