ஒவ்வொரு மாதத்தின் 5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Continues below advertisement

சபரிமலை செல்ல பொதுவாக நிலக்கல் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பம்பை நதிக்கு சென்று, அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியில் ஏற வேண்டும். இந்த பாதைதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த பாதையில் செல்வார்கள். இதேபோல் எரிமேலியில் இருந்து சபரிமலைக்கு பெருவழிப்பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் நடந்து  செல்வர்.

Continues below advertisement

 

இந்த இரண்டு பாதையை தாண்டி, மற்ற இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளுமே மிக எளிதான பாதைகளாகும். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம், புல்லுமேடு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக சபரிமலைக்கு செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி இந்த 2 பாதைகளும் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்காக திறந்துவிடப்படுவது வழக்கமாகும். 

குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்க உள்ளன. ஆன்லைன் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர். இதற்காக கடந்த நவ.1-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கின. மாதாந்திர வழிபாட்டுக்கு வனப் பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தற்போது மண்டல காலம் தொடங்க உள்ளதால் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி - கல்லக்கட்டி, வண்டிப் பெரியாறு - சத்திரம் உள்ளிட்ட வனப்பகுதி வழியே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக தரிசன முன்பதிவின் போதே பக்தர்கள் தாங்கள் செல்ல விரும்பும் பாதையையும் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்பதிவின் அடிப்படியிலே பக்தர்கள் சம்பந்தப்பட்ட வனப்பாதையில் செல்ல முடியும்.

இந்த வனப்பாதைகள் நவ.17-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வனத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக கரிமலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கின. முதல் நாளான நவ.17-ம் தேதி காலை நுழைவுப் பகுதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் இதன் வழியே அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் கூறினர்.கடந்த ஜனவரியில் மகர பூஜையின்போது வனப்பாதை திறக்கப்பட்டது. சுமார் 10 மாதமாக இங்கு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதனால் புதர்மண்டி, பாதைகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

ஆகவே சுத்தப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தரிசனத்துக்கும், பெருவழிப் பாதையில் செல்வதற்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நிர்ணயித்த அளவு முடிந்ததும் பின்பு யாரும் அந்த நாளில் முன்பதிவு செய்ய முடியாது. ஆகவே தங்கள் பயணத் திட்டத்துக்கு ஏற்ப நாட்களை விரைவாக தேர்வு செய்து கொள்ளும்படி திருவிதாங்கூர் தேவசம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1) எருமேலி - பேரூர்தோடு - கொய்காக்கல்காவு - அழுகடவ் - கரிமலை - செரியானாவட்டம் - வலியானவட்டம் வழியாக பம்பாவை அடையலாம். மாலை 4 மணிக்கு மேல் இந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

2) வண்டிப்பெரியார் - சத்திரம் - புல்லுமேடு பாதை. வனத்துறை மற்றும் காவல்துறையினரால் சோதனை நடத்தப்படும். இங்கு மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. சத்திரத்திலிருந்து கோவிலுக்கான தூரம் சுமார் 12 கி.மீ. கூகுள் மேப்பில் காட்டப்பட்டுள்ள புல்லுமேடு, அய்யப்பன்கோவில் ஊராட்சிக்கு அருகில் உள்ள அதே பெயரில் உள்ள மற்றொரு இடமாக இருக்கலாம். சரியான பாதை குமளி-குட்டிக்கானம் திசையில் உள்ளது.