சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்பட்ட மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 3 முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று (ஜனவரி 14ஆம் தேதி) நடைபெறுகிறது. சபரிமலையில் இன்று நடைபெறும் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். சபரிமலையில் மண்டல பூஜை முடிந்தவுடன், மகர விளக்கு பூஜை தொடங்கும். இதையொட்டி, பொன்பலமேட்டில் மகர ஜோதியா ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
சபரிமலையில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கிய மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை எட்டியதையடுத்து இன்று மகரவிளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னரே 18ஆம் படி ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மகரஜோதி தரிசிக்க அனுமதி அளிக்கப்படும். மரங்களின் மீது ஏறவோ, உயரமான இடங்களுக்கு செல்லவோ அனுமதி கிடையாது.