சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் விசாரணை! உச்சநீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு, எதிர்பார்ப்பில் பக்தர்கள்!
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்து மத சுதந்திரமா? பாலின சமத்துவமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவது தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை, வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கப்போவதாக உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2026) அறிவித்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா பெருந்தொற்று கால இடைவெளிக்குப் பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து ஏராளமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவது குறித்து மத சுதந்திரமா? பாலின சமத்துவமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கொடுத்தது. அதன்படி இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு போகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்ப்பு இந்து அமைப்புகளிடையே கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்து அமைப்புகள் இந்த தீர்ப்பை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. மாறாக இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சீராய்வு மனுக்களுக்கு ஆதரவான ஆதாரங்களை திரட்டி கொடுப்பது, வழக்கறிஞர்களாக வாதங்களை முன்வைப்பது என்கிற பணிகளை மேற்கொண்டன.
2018 தீர்ப்புக்கு எதிராக 65க்கும் அதிகமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் நாயர் சர்வீஸ் சொசைட்டி, பந்தளம் அரச குடும்பம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முக்கியமானவை. இந்த 2 அமைப்புக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இன்று இந்த சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், இந்த வழக்குகள் 9 தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி கூறியிருக்கிறார்.ஏப்.7ம் தேதி முதல் இந்த வழக்குகள் மீதான விசாரணை தொடரும். இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது அரசியல் சாசன அமர்வு வேறு ஒரு முக்கியமான வழக்கை விசாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சபரிமலை வழக்கு விசாரணைக்கு வரும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதற்கு இருந்து வந்த தடையை கடந்த 2018-இல் நீக்கிய உச்சநீதிமன்றம், இந்தப் பாலினப் பாகுபாடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று இத்தீா்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.























