சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை சீசனுக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளையுடன் அடைக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக 2025ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 14ம் தேதி, மகரசங்கராந்தி தினத்தன்று மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஐயப்பன் மகர ஜோதி வடிவில் பக்தர்கள் காட்சி அளித்தார். நடப்பு சீசனை முன்னிட்டு நேற்றுடன் நெய்அபிஷேக, களபாபிஷேக வழிபாடுகள் நிறைவடைந்தது. கோயிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து இரவு மாளிகப்புரத்து குருதி சமர்ப்பன சடங்குகளுக்கு பின் கோயில் நடை அடைக்கப்படும்.
நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்படும். நாளை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெறும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் அடுத்த மாதம் பிப்ரவரி 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.






















