தென் இந்தியாவின் புகழ்பெற்ற கோயிலான கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரு பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. காரணம், அந்தக் கோயிலின் சில சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் சபரிமலை கோயிலில் இந்த திருட்டு நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தங்கம் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்துள்ளது. போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னாள் உதவி பூசாரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

இந்த வழக்கை கண்காணித்து வரும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர் விசாரணைகளை நடத்தி வருகிறது. அடுத்த அமர்வு புதன்கிழமை நடைபெற உள்ளது. சபரிமலை கோயிலின் சிறப்பு ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பல பகுதிகளில் சிலைகளில் இருந்து தங்கம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

Continues below advertisement

சிலைகளின் பழுது பார்க்கும் பணிகளைப் பற்றிய முழுமையான கோப்புகள் மற்றும் பதிவுகளை சமர்ப்பிக்க கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபோது, "உண்மையில் ஒரு தேனீ கூட்டின் மீது கைவைக்கிறோம் என்பதைக் கூட நாங்கள் உணரவில்லை" என்று நீதிபதிகள் கூறினர். ஆவணங்களின்படி, சபரிமலை கோயிலுக்கு யுனைடெட் ப்ரிவரீஸ் நிறுவனம் மூலம் விஜய்மல்லையாவால் சுமார் 30.291 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டது. 1998-1999 காலக்கட்டத்தில் இந்த தங்கம் கோயில் ஆபரணங்கள் மற்றும் வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அதன்படி துவாரபாலகர்கள் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களிலும் 1.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB), துவாரபாலகர் சிலைகள் மீதான தங்க கவசத்தை செப்பனிடுவதற்காக, வெளியே எடுக்க உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவருக்கு அனுமதி அளித்தது. உன்னிகிருஷ்ணன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர். இரண்டு மாதங்களுக்கு பிறகு கவசங்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது அவற்றின் எடை பரிசோதிக்கப்படவில்லை. ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அவை மிகவும் இலகுவாக இருந்ததாக தெரியவந்தது. எஸ்ஐடி குழுவின் அடுத்தகட்ட விசாரணையில், சிலைகள் வைக்கப்படும் மேடைகள் மற்றும் கதவுகளின் சட்டகங்களிலிருந்தும் தங்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2019 முதல் இதுவரை சுமார் 4.54 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது .சிலைகளை கோயிலுக்கு வெளியே கொண்டு செல்ல உன்னிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டது கவனிக்கப்படவேண்டியது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது, ஏனெனில் பொதுவாக செப்பனிடும் பணி கோவியிக்குள் தான் செய்யப்படுகிறது. அதே போல், விலைமதிப்பு மிக்க பொருட்களை அவரிடம் ஒப்படைக்கும்போது, கோயில் வாரியம் அதனை வெறும் 'செம்பு தகடு' என பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செப்பனிடும் பணிக்குப் பிறகு சுமார் 474.9 கிராம் தங்கத்தை வைத்துக்கொள்ள உன்னிகிருஷ்ணனை அனுமதித்தது பெரும் தவறு என கோயில் வாரியத்தை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். உன்னிகிருஷ்ணன் கோயில் வாரியத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஒரு தெரிந்த அல்லது உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக அந்த மீதமுள்ள தங்கத்தை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்ததை நீதிமன்றம் குறிப்பிடுகிறது. இந்த நிலையில், உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றத்திலிருந்து வெளியேறும்போது, அங்கே காத்திருந்த செய்தியாளர்களை நோக்கி என்னை சதி செய்து இதில் சிக்க வைத்துள்ளனர் என்று உன்னிகிருஷ்ணன் கூச்சலிட்டார். உண்மை வெளிவரும். இந்தச் சதியில் என்னை சிக்க வைத்தவர்கள் சட்டத்தின் முன் நிற்க வேண்டி நேரம் வரும். எல்லாமும் வெளிச்சத்திற்கு வரும்," என்று அப்போது அவர் கூறினார்.

கடந்த சில நாட்களில், போலீசார் கோயில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளை கைது செய்துள்ளனர். தேவசம் வாரிய தலைவர் பி.எஸ். பிரசாந்த் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய வாரியத்திற்கு இந்த விவகாரத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தாலும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் கூறினார். இந்த விசாரணையை ஆறு வாரங்களில் முடிக்க SIT-க்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும்  அவர்கள் எந்த பதவியில், எத்தகைய செல்வாக்குடன் அல்லது சமூக அந்தஸ்துடன் இருந்தாலும், அவர்களை அடையாளம் காண்பதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.