அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 30 நாட்களில்  மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குப் பின் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 


இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக சன்னிதானம் பகுதியில் இருந்து உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு  நடைமுறை பின்பற்றப்படுகிறது.


கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை


கூட்ட நெரிசலால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ன? என மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் நாள்தோறும் 90 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள்,குழந்தைகள், முதியவர்களுக்கு தனிவரிசை ஏற்படுத்தப்பட்டது. 


அதேசமயம் வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவோ, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்தது. இப்படியான குற்றச்சாட்டுகளைகளையும் வகையில் தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சன்னிதானத்தில் உள்ள 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


40 ஆயிரம்  பக்தர்கள் மட்டுமே அனுமதி


இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 27-ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 27-ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறுகிறது. அன்று இரவு வழக்கமாக பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பிறகு மகர விளக்கு பூஜைக்காக 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.


இதற்கிடையே மண்டல பூஜைக்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் 26-ஆம் தேதி மதிய நேரத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்பு அன்றைய தினத்தில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.