தேர்தலில் அரசியல் வியூகங்களை வகுத்து பின்னர் செயல்பாட்டாளராக மாறிய பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை பிஜேபி-ஆர்எஸ்எஸ் கூட்டணியை ஒரு கப் காபியுடன் ஒப்பிட்டார். அதில் பாஜக என்பது மேலிருக்கும் வெறும் நுரைதான் அடியில் இருக்கும் காபிதான் அதன் தாய் நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். என்றார்.


அக்டோபர் 2ந் தேதி முதல் பீகாரில் 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள பாத யாத்திரையில் இருக்கும் கிஷோர்  மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள லாரியாவில் பேசுகையில் இந்த ஒற்றுமையைக் குறிப்பிட்டார். 


"காந்தியின் காங்கிரஸக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் மட்டுமே கோட்சேவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும்" என்பதை உணர தனக்கு நீண்ட காலம் பிடித்ததாக கிஷோர் வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்தப் பாதையில் செல்லாமல் தான் நிதிஷ் குமார் மற்றும் ஜெகன் மோகனுக்கு உதவி காலத்தை வீணடித்ததாகவும் கவலை தெரிவித்துள்ளார்.




நரேந்திர மோடியின் அரசியல் தந்திரங்களைத் தடுத்து நிறுத்துவதில் எதிர்க்கட்சியின் செயல்திறன் பற்றி தொடக்கத்தில் இருந்தே பிரசாந்த் கிஷோர் சந்தேகத்தில் இருந்தாலும் மற்றொருபக்கம் அது என்ன என்பதை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், பாஜகவை தோற்கடிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.


"நீங்கள் எப்போதாவது ஒரு கப் காப்பியைப் கவனித்திருக்கிறீர்களா? மேலே நுரை வருகிறது. பாஜக அப்படித்தான் இருக்கிறது. அதற்குக் கீழே ஆர்எஸ்எஸ் என்ற ஆழமான அமைப்பு உள்ளது. சமூகக் கட்டமைப்பில் ஆர் எஸ் எஸ் புழுக்கள் போலப் பரவிவிட்டது. அதைக் குறுக்கு வழிகளில் தற்போது தோற்கடிக்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.


2014 லோக்சபா தேர்தலில் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை அவர் கையாண்டதுதான் பிரசாந்த் கிஷோரின் முழு முதல் புகழுக்கு காரணம், இது அந்தத் தேர்தலில் பாஜக தனித்து பெரும்பான்மை பெற உதவியது.


மற்றொருபக்கம் தனது யாத்திரையின் ஒரு பகுதியாக தன்னை பாரதிய ஜனதா ஏஜெண்ட் என்று அழைக்கும் நிதிஷ் குமார் கட்சியை சரமாரியாகச் சாடினார்.


"சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சிக்கு எதிராக நாடு கொதித்தெழுந்தபோது நான் ஜேடி(யு) தேசிய துணைத் தலைவராக இருந்தேன். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக எனது கட்சியின் எம்.பி.க்கள் வாக்களித்ததை அறிந்து திகைத்தேன்" என்று நினைவு கூர்ந்தார். 45 வயதான பிரசாந்த் கிஷோர்  பெரும்பாலும் கருத்தியல் ரீதியாக அஞ்ஞானவாதியாகக் கருதப்படுகிறார்.


"அப்போது எங்கள் தேசியத் தலைவராக இருந்த நிதிஷ் குமாரை நான் எதிர்கொண்டேன். அவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும், உறுப்பினர்கள் வாக்களித்ததைப் பற்றி அறியவில்லை என்றும், ஆனால் பீகாரில் என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக உறுதியளித்தார். இந்த இரட்டைப் போக்கு நிலவிய இடத்தில் என்னால் வேலை செய்ய முடியாது என்பதை உணர்த்தியது. அதனால் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட தகராறில் ஜே.டி.(யு)வில் இருந்து நீக்கப்பட்டேன்” என கிஷோர் கூறினார்.


கிஷோர், காங்கிரசில் கடந்த ஆண்டு அதன் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்த போதிலும் பலனளிக்கவில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையின் ஒன்றிணைந்த அந்தக் கட்சியின் பழைய சித்தாந்தத்தை தான் போற்றுவதாகக் குறிப்பிட்டார்.


"காந்தியின் காங்கிரஸை புத்துயிர் அளிப்பதன் மூலம் மட்டுமே கோட்சேவின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியும்" என்ற கிஷோர், மகாத்மாவின் கொலையாளிக்கு ஆர்எஸ்எஸ் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்..