2024 ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பெரும் “வாக்கு திருட்டு” நடந்ததாக சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், உண்மை கண்டறிதலில், அவரது குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக அடிபட்டுவிட்டது. தனது “H-Files” மூலம் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் நன்கு திட்டமிட்ட ஒரு தவறான தகவல் பிரசாரமாகவே மாறியுள்ளது.
ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது
முதலாவது குற்றச்சாட்டாக, வயதான ஒரு பெண்மணியின் பெயர், தாகோலா கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் 220 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக ராகுல் காந்தி கூறினார். ஆனால், அந்தப் பட்டியல் “முலானா” தொகுதியில் இருந்தது. அங்கு காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. உண்மையில், வாக்காளர் எண்ணிக்கை அதிகமானால் தேர்தல் ஆணையம் புதிய பூத் பிரிவுகளை உருவாக்குவது வழக்கமான ஒன்று. அது சாதாரண நிர்வாக நடைமுறைதான், மோசடி அல்ல.
அடுத்ததாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றிய குற்றச்சாட்டு. பொதுவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்பாத ராகுல் காந்தி, சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக வந்தவுடன், அதையே முக்கிய சான்றாக எடுத்துக் கொண்டார். இதுவே ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதன்பின், தபால் வாக்கு குறித்து அவர் கூறியதெல்லாம் தவறான விளக்கம் என்பது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் மொத்த தபால் வாக்குகள் 0.57 சதவீதம் மட்டுமே. இத்தனை சிறிய எண்ணிக்கையை கொண்டு பெரிய அளவிலான மோசடி நடந்தது எனச் சொல்லுவது அபத்தமானதாகும். மேலும், பல இடங்களில் பாஜக தான் தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்து இறுதியில் தோற்றது என்பது பதிவாகியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான 99.43 சதவீத வாக்குகளை விட்டுவிட்டு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான தபால் வாக்குகளை வைத்து அவர் சுமத்திய குற்றச்சாட்டு, வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டது என தெளிவாகிறது.
வெட்டி ஒட்டி வெளியிடப்பட்ட பொய்யான வீடியோ
மேலும், முதலமைச்சர்ர் நயாப் சிங் சைனியின் பேச்சை துண்டித்து வெளியிட்டு “வாக்கு திருட்டு ஒப்புதல்” என ராகுல் காந்தி வதந்தி பரப்பினார். ஆனால், அந்த முழு வீடியோவில், “தனியாக அரசு அமைக்கும் நம்பிக்கை” குறித்து அவர் கூறியிருந்தார் என்பது பின்னர் உறுதியானது. பின்னர், அது குறித்து முதலமைச்சர் சைனி ராகுல் காந்தியை விமர்சித்தது தனிக்கதை.
அதேபோல, ஒரே பெண் 22 முறை வாக்களித்தார் என்ற ராகுலின் குற்றச்சாட்டும், முழுக்க முழுக்க புனையப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. பெயர் வேறுபாடு, குடியிருப்பு மாற்றம் போன்ற காரணங்களால், சில பெயர்கள் இருமுறை தோன்றலாம். தேர்தல் ஆணையம் அவற்றை திருத்துவது வழக்கம். இதற்கு எந்த சட்டபூர்வ புகாரும் காங்கிரஸால் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டில் வெளிநாட்டையும் இழுத்த ராகுல்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி “நகல் வாக்காளர் அடையாளம்” என காங்கிரஸ் காட்டியது. ஆனால், அந்த பிரேசில் நாட்டு மாடல், தனக்கு இந்திய அரசியலோடு தொடர்பே இல்லை என தெரிவித்திருந்தார். இதுவே காங்கிரஸின் தவறான பிரசாரத்தின் உச்சநிலையை காட்டுகிறது.
மொத்தத்தில், ராகுல் காந்தியின் “H-Files”, உண்மைக்குப் புறம்பான நாடகம் என்பது தெளிவாகிறது. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் உண்மையான ஆதாரமே இல்லை. தேர்தல் முறைகள் வெளிப்படையாகவும், சட்டப்படியும் நடைபெற்றுள்ளன. மொத்தத்தில், ராகுல் காந்தி சொன்னது போல் உண்மையில் “வாக்கு திருட்டு” நடைபெறவில்லை. மாறாக, ராகுல் காந்தியால் ‘உண்மை திருட்டு‘ நடத்தப்பட்டுள்ளது என்பதே தெளிவாகிறது.