பஞ்சாப் முதலமைச்சராக பதவி வகிப்பவர் பகவந்த் சிங் மான். தொலைக்காட்சியில் காமெடி ஷோ மூலம் பிரபலமானவர். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாப் மக்கள் கட்சியில் சேர்ந்ததன் மூலம் அரசியலில் கால் பதித்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்ரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


பஞ்சாப் முதலமைச்சர் மானுக்கு எதிராக பொங்கி எழுந்த மகள்:


கடந்த 2019ஆம் ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்தாண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதலமைச்சரானார். இவர், அதிகளவில் மது குடிக்கிறார் என்பது தொடர் குற்றச்சாட்டாக எழுந்து வருகிறது. ஆனால், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பகவந்த் சிங் மான் மறுத்து வருகிறார்.


இந்த நிலையில், பகவந்த் சிங் மானின் மகளே அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மானின் முன்னாள் மனைவியும் தனது தாயுமான இந்தர்பிரீத் கவுரை அவர் மது அருந்திவிட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தற்போது கைவிட்டுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


பஞ்சாப் முதலமைச்சர் மானின் முதன் மனைவியின் மகள் சீரத் மான் வெளியிட்ட வீடியோவில், "நான்தான் முதலமைச்சர் பகவந்த் மானின் மகள். ஆனால், அவரை அப்பா என்று அழைக்கும் உரிமையை நீண்ட காலத்துக்கு முன்பே அவர் இழந்துவிட்டார். எனவே, அவரை முதலமைச்சர் மான் என்று குறிப்பிடுகிறேன்.


நான் இந்த வீடியோவை வெளியிடுவதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. என்னை பற்றிய உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களைப் பற்றி மக்கள் நிறைய கேள்விப்பட்டுள்ளனர். அதை அனைத்தையும் முதலமைச்சர் மானே கூறியுள்ளார்.
நான் இன்றுவரை அமைதியாக இருந்திருக்கிறேன். 


"வீட்டுக்குள்ள கூட அனுமதிக்கல்ல"


எனது அம்மாவும் அமைதியாக இருந்திருக்கிறார். எங்களுடைய மௌனம் எங்களுடைய பலவீனமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக நான் உணர்கிறேன். எங்களின் மௌனத்தினால் தான் தற்போது அவர் உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார் என்பது அவருக்குத் தெரியாது. 
மானின் இரண்டாவது மனைவி டாக்டர் குர்கிரத் கர்ப்பமாக உள்ளார். 


முதலமைச்சர் மான் மூன்றாவது முறையாக தந்தையாகப் போகிறார். இது குறித்து மற்றவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன். இது குறித்து மான் என்னிடமோ அல்லது என் சகோதரரிடமோ தெரிவிக்க கூட அக்கறை காட்டவில்லை. உங்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால், நீங்கள் அவர்களைப் கைவிட்டுவிட்டீர்கள். இப்போது, மூன்றாவதாக நபரை இந்த உலகத்திற்குக் கொண்டுவர விரும்புகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?


எனது சகோதரன் தோஷன், பஞ்சாப் முதலமைச்சர் மானை சந்திக்க இரண்டு முறை சென்றார். எனது சகோதரன் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்பினார். தோஷனை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கவில்லை. பஞ்சாப் முதலமைச்சர் மானை சந்திக்க சென்ற இரண்டு முறையும் தோஷனுக்கு நிறைய நடந்துவிட்டது. அதன் பிறகு, எனது சகோதரன் குடும்ப நண்பர்களுடன் சண்டிகரில் தங்கிவிட்டான். 


 






ஒரு நாள், அவன் மீண்டும் முதலமைச்சர் மான் வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அங்கு வாழ முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். தனது சொந்த குழந்தைகளின் பொறுப்பை ஏற்க முடியாத ஒருவர், பஞ்சாப் மக்களின் பொறுப்பை எப்படி ஏற்பார்?" என பேசியுள்ளார்.