புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் பள்ளியில் கூடுதல் நோட்டு புத்தகங்களை வாங்குமாறு பெற்றோர்களை நிர்வாகம் வற்புறுத்திய நிகழ்வு  சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

Continues below advertisement

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளி, கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் செயல்படும் சன்பீம் பள்ளியில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

அந்த பள்ளியின் மம்தா மிஸ்ரா, நீலம் வர்மா என்ற ஒரு மாணவியின் பெற்றோரிடம் மற்றவர்கள் முன்னிலையில் கோபமாக வாக்குவாதம் செய்து கத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோ அப்படியே இணையத்திலும் ட்ரெண்டானது. இது கடுமையான கண்டனங்களை இணையவாசிகளிடம் பெற்றது. 

Continues below advertisement

அந்த நிகழ்வில் என்ன நடந்தது என்பதை நீலம் வர்மா விளக்கியுள்ளார். அதாவது நீலம் வர்மாவின் மகள் அலிஷா சன்பீம் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.  அவரை அழைத்து வர சம்பந்தப்பட்ட நாளில் இவர் சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் ரூ.1,200 மதிப்புள்ள கூடுதல் நோட்டுப் புத்தகங்களை பள்ளியில் வாங்குமாறு வற்புறுத்தியுள்ளது. ஆனால் தேவையான பாடப் பொருட்களைத் தான் ஏற்கெனவே வாங்கிவிட்டதாக நீலம் வர்மா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நோட்டுப் புத்தகங்கள் இல்லாததால் அலிஷா வீட்டுப்பாடம் செய்யாமல் வர தொடங்கிய நிலையில் நீலம் வர்மா பள்ளி முதல்வரை அணுகி கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். 

ஆனால் அவர் கால அவகாசம் கொடுக்க மறுத்து விட்டார். மேலு தன்னை படிக்காத முட்டாள், பண்பாடு அற்றவள் என தலைமையாசிரியர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், பள்ளியிலிருந்து தன் குழந்தையின் பெயரை நீக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் நீலம் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இணையதளம் மூலம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி முதல்வர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். பேஸ்புக்கில் அவர் பதிவிட்ட வீடியோவில் பள்ளிக் கட்டணத்தைக் குறைக்குமாறு அந்தப் பெற்றோர் தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், தடுப்பூசி முகாம் ஒன்றின்போது இந்தச் சம்பவம் நடந்ததால் பின்னர் பேசிக் கொள்ளலாம் என சொன்னேன் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் பற்றி பல பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் இப்படித்தான் தங்களை கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.