புதுச்சேரி: தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தென்மேற்கு பருவழை முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 29 -ம் தேதி தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் கூட தற்போது தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இருதினகளுக்கு முன்பு மழை தொடங்கிய தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏறக்குறைய சென்னையின் அனைத்து இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது.


தமிழ்நாட்டின் பிற இடங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்து வருகின்றன. இந்த பகுதிகளில் இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு, அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையின்  காரணமாக புதுச்சேரி, காரைக்கால் காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.


மேலும் படிக்க


Rain Alert: நாளை 8 மாவட்டங்களில் மிக கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை நாட்களுக்கு? முழு விவரம்..


Chennai Rains: ரெடியாகுங்க சென்னை மக்களே...! இன்னும் இரண்டு மணி நேரத்தில்...! அப்டேட் கொடுத்த வானிலை மையம்