DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
சித்தராமையா அணிக்கும் டி.கே.சிவக்குமார் அணிக்கும் இடையே அரங்கேறிவந்த பனிப்போர் இன்று சித்தராமையாவின் ராஜினாமாவால் முடிவுக்கு வந்திருக்கிறது

கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸில் முதல்வர் நாற்காலி விவகாரத்தில் சித்தராமையா அணிக்கும் டி.கே.சிவக்குமார் அணிக்கும் இடையே அரங்கேறிவந்த பனிப்போர் இன்று சித்தராமையாவின் ராஜினாமாவால் முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய முதல்வராக டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் டெல்லி தலைமை டிக் அடித்துள்ள நிலையில் அவரின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்
பலம் வாய்ந்த சமூகப் பின்னணியும் பண பலமும்
கர்நாடகா அரசியலில் இன்று முக்கிய சமூக பின்னணி கொண்டவராகவும், காங்கிரஸின் நிதி ஆதாரமாக பண பலம் மிக்கவராகவும் டி.கே.சிவக்குமார் திகழ்கிறார். மாநிலத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கி கொண்ட இரண்டு முக்கிய சமூகங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகத்தில், இவர் ஒக்கலிகா சமூகத்தினர் என்பதால், இவர் வசம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியும் இருக்கிறது.
இன்னொருபக்கம், 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அவர் காட்டிய அதிகாரபூர்வ சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ.1,400 கோடி. அந்த சமயத்தில் இந்தியாவிலேயே பணக்கார எம்.எல்.ஏ ஆவார்.
முதல் தேர்தல்: தேவகவுடாவுடன் மோதல்
இப்போது அவர் முதல்வராகவும் பதவியேற்கவிருக்கிறார். ஆனால் இன்று அவர் அடைந்திருக்கும் இந்த இலக்கிற்கான பயணம் 1980-ல் தொடங்கியது. 1962-ம் ஆண்டு மே 15 ஆம் தேதி கனகபுரா தாலுகாவில் உள்ள தொட்டலஹள்ளி கிராமத்தில் கெம்பேகவுடா மற்றும் கௌரம்மா ஆகியோருக்கு மகனாக இவர் பிறந்தார்.
கல்லூரி பருவத்திலேயே அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக துடிப்பாய் இருந்த இவர், 1985-ல் 23 வயதில் தனது நிலத்தையெல்லாம் விற்று தேர்தலில் களமிறங்கினார். காங்கிரஸ் வேட்பாளராக இளைஞர்களை ஒன்று திரட்டி சாத்தனுர் தொகுதியில் அவரின் ஒக்கலிகா சமூகத்தில் செல்வாக்குமிக்க தேவகவுடாவுக்கு எதிராகப் போட்டியிட்டார். ஆனால், சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரிடம் தோல்வியையைத் தழுவினார் சிவக்குமார். பின்னாளில், அந்த தேவகவுடா பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத்திற்குள் முதல் எண்ட்ரி
அதன் பின்னர் 1989 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று 27 வயதிலேயே சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். அதோடு, 1991-ல் மாநிலத்தில் நிலவிய அரசியல் குளறுபடிகளுக்கு நடுவே, பங்காரப்பா முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட சிவக்குமார் முக்கிய காரணியாக விளங்கியதாகக் கூறப்படுகிறது.
அசுர வளர்ச்சியும் தொடர் வெற்றிகளும் (1994 - 2013)
காங்கிரஸில் இளம் தலைவராக உருவெடுத்த சிவக்குமாருக்கு 1994 தேர்தலில் காங்கிரஸ் சீட் கொடுக்க மறுத்துவிட்டது. ஆனாலும் அதோடு நின்றுவிடாத அவர், "கட்சி என்னைக் கைவிட்டாலும் மக்கள் கைவிடமாட்டார்கள்" என அதே தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கி, தனது சொந்தக் கட்சி வேட்பாளரை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி வெற்றிபெற்றார்.
அவரின் செல்வாக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருப்பதைக் கண்ட காங்கிரஸ், 1999 தேர்தலில் அதே தொகுதியில் அவருக்கு சீட் கொடுத்தது மட்டுமின்றி, வெற்றிபெற்ற பின்னர் அப்போதைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சரவையில், அமைச்சர் பதவியும் வழங்கியது. நடுவில், 2002-ல் கனகபுரா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஒருமுறை தேவகவுடாவிடம் தோல்வியடைந்தார்.
தோல்வியே இல்லாத 'கனகபுரா' நாயகன்
அதைத் தொடர்ந்து 2004 தேர்தலில் சாத்தனுர் தொகுதியில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றிபெற்ற சிவக்குமார், தொகுதி மறுவரையறைக்குப் பின்னர், 2008 முதல் கடைசியாக 2023-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை கனகபுரா தொகுதியில் 4 முறை தொடர்ந்து வெற்றிபெற்றார். 2008 முதல் 2010 வரை மாநில காங்கிரஸின் செயல்தலைவராக பணியாற்றிய சிவக்குமார், 2013-ல் முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராகச் செயல்பட்டார்.
கூட்டணி ஆட்சியை அமைத்த சாணக்கியத்தனம்
2018 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 இடங்களில் வென்றாலும், 79 இடங்களில் வென்ற காங்கிரஸையும், 37 இடங்களில் வென்ற மதசார்பற்ற ஜனதா தளத்தையும் கூட்டணியமைக்க வைத்து, முதல்வர் பதவியைக் குமாரசாமியிடம் கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்தார் சிவக்குமார். ஆனாலும், அந்த ஆட்சி ஓராண்டு தான் நீடித்தது.
2019 ஜூலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்கள் திடீரென பதவியையை ராஜினாமா செய்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது. இதனால், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில் பாஜக தான் இப்படி ஸ்கெட்ச் போட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
மாநிலத் தலைவர் பதவி மற்றும் 2023 தேர்தல் வெற்றி
இந்த இக்கட்டான சூழலில்தான் 2020-ல் காங்கிரஸ் மாநில தலைவராக சிவக்குமார் பொறுப்பேற்றார். 2023-ல் சட்டமன்றத் தேர்தலும் வந்தது. எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என தீவிரமாகப் பணியாற்றிய சிவக்குமார், காங்கிரஸை தனிப்பெரும்பான்மையுடன் 135 இடங்களில் வெற்றிபெறவைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.
சித்தராமையாவுடன் உடன்படிக்கை
அப்போதே, இவருக்கு தான் முதலமைச்சர் பதவியும் வரும் என்று பலரும் எதிர்பார்த்த நேரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக சித்தராமையாவை முதலமைச்சராக்கியது டெல்லி தலைமை. அதேசமயம் சிவக்குமார், தன்னை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும், மாநில தலைவர் பதவி தன் வசமே இருக்க வேண்டும் என்றும், இரண்டரை ஆண்டுக்குப் பின் தன்னை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டதாகவும், அதற்கு டெல்லி தலைமை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
முதல்வராகும் சித்தராமையா
இந்த நிலையில்தான், கடந்த நவம்பரோடு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்ததால், சிவக்குமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். கட்சிக்குள்ளேயே சித்தராமையா அணி, சிவக்குமார் அணி என கடந்த 6 மாதங்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், டெல்லி தலைமையின் உத்தரவுக்கு இணங்கி சித்தராமையா முதலமைச்சர் பதவியையை ராஜினாமா செய்திருக்கிறார்.
1989 முதல் இன்று வரை கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியே சந்திக்காமல், எம்.எல்.ஏ, அமைச்சர், காங்கிரஸ் மாநில தலைவர், துணை முதலமைச்சர் என தவிர்க்க முடியாதவராக உயர்ந்த சிவக்குமார் தற்போது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்






















