ஒடிசா மாநிலத்தில் 15வது முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த 52 வயதான மோகன் சரண் மாஜி நேற்று பதவியேற்றார். சரண் மாஜியுடன் துணை முதல்வர்களாக கனக்வர்தன் சிங்தேவ் மற்றும் பிரபாவதி பரிதா ஆகியோரு பதவியேற்று கொண்டனர். 


இவர்களுடன் சுரேஷ் பூஜாரி, ரபிநாராயண் நாயக், நித்யானந்த் கோண்ட், கிருஷ்ண சந்திர பத்ரா, பிருத்விராஜ் ஹரிசந்தன், முகேஷ் மகாலிங்க, பிபூதி பூஷன் ஜெனா, கிருஷ்ண சந்திர மகாபத்ரா, கணேஷ் ராம் சிங் குந்தியா, சூர்யவன்ஷி சுராஜ், பிரதீப் பால்சமந்தா, கோகுல நந்த் மல்லிக் மற்றும் சம்பத் குமார் ஸ்வைன் ஆகிய 13 பேரும் அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். 






இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், உத்தரபிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், அசாம், ஹரியானா, கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றனர். 


ஒடிசா மாநில வாழ்த்து பாடலை அவமதித்தாரா பிரதமர் மோடி? 


ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்கும் விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, ஒடிசாவின் மாநில வாழ்த்து பாடலான “பந்தே உத்கலா ஜனனி” பாடி கொண்டிருந்தது. அப்போது அவ்வளவு நின்று கொண்டிருந்த பிரதமர் மோடி, பாடல் முடியும் முன்பே, பாதியில் திடீரென தனது இருக்கையில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து, ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றுள்ள மோகன் சரண் மாஜியும் அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை கிளப்பி வருகிறது. 


25 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் பிரதமர் மோடியும், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் நிற்பதையும், பின்னர் அமருவதையும் காணலாம் அப்போது தூரத்தில் இதை பார்த்த உள்துறை அமௌச்சர் அமித் ஷா நடந்து வந்து , ஒடிசா மாநில வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்குமாறு சொன்னார். அதன்பின், இருவரும் எழுந்து நின்றனர். 






இதைபார்த்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த பலரும் இந்த வீடியோ கிளப்பை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில், இது ஒடிசாவையும், ஒடிசா மக்களவையும் அவமதிக்கும் செயல் என்று சமூக வலைதளங்களில் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.