அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். 


சிறப்பு விரதம் இருக்கும் பிரதமர் மோடி:


இதற்காக 11 நாள்களுக்கு சிறப்பு விரதம் இருக்க தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. தரையில் தூங்குவது, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய அதிகாலையில் எழுந்திருப்பது, மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, சிறிது நேரம் மௌன விரதம் இருப்பது, சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது, மத நூல்களைப் படிப்பது, தூய்மையைப் பேணுவது, சொந்த வேலைகளை தானே செய்வது என பல வகையான கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறார் பிரதமர் மோடி.


நேற்று முன்தினம், நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் கோதாவரி கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ கலா ராமர் கோயிலில் பிரார்த்தனை செய்து பிரதமர் மோடி, தனது அனுஷ்டானத்தைத் தொடங்கினார். இந்த கோயில், ராமர் வாழ்வில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. 


ராமாயணத்தில் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் ராமரை பற்றி எடுத்துரைக்கும் யுத்த காண்டம் தொடர்பான கதா காலட்சேபத்தை கேட்பதையும் பஜனை பாடல்களை பாடுவதையும் விரதத்தின் ஒரு அங்கமாக பிரதமர் மோடி செய்து வருகிறார். அதுமட்டும் இன்றி, கோயிலில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


தரையில் தூங்கி சாத்வீகமான உணவு உண்ணும் பிரதமர் மோடி:


பிரதமர் மோடியின் விரதம் குறித்து விரிவாக பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மஹந்த் நவல் கிஷோர் தாஸ், "அனுஷ்டானத்தின் போது, ​​முடிந்தால், தரையில் தூங்கலாம். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்துவிட்டு, கடவுள் முன் விளக்கேற்றி தியானம் செய்ய வேண்டும். கடவுளை வழிபட வேண்டும்.


ஒரு அனுஷ்டானம் என்பது குறைந்த பட்சம், பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். அதிகபட்சம், சாத்வீக உணவை உண்ண வேண்டும்.  இந்த காலகட்டத்தில் ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும். ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு கடவுளுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.


இதுகுறித்து ஆன்மீக குரு சுவாமி தீபங்கர் கூறுகையில், "அனுஷ்டானத்தின் போது சிறிது நேரம் மெளன விரதம் இருந்து,  சுந்தரகாண்டத்தை வாசிக்கலாம். ராமரின் ஜபம் செய்யலாம். யாகத்தில் ஈடுபடலாம். அனுஷ்டானத்தின் போது ஒரு குறிப்பிட்ட முறையில் தூங்கி உட்கார வேண்டும். இது சடங்குகளின் ஒரு அங்கம். அனுஷ்டான காலத்தில் ஒருவர் முடி அல்லது நகங்களை வெட்டக்கூடாது" என்றார்.