தவறாக மருந்து தொடர்பாக விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


சர்ச்சையான விளம்பரம்:


பதஞ்சலி நிறுவனத்தின் சில பொருட்கள், சில நோய்களை குணமாக்கும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை எதிர்த்து, தவறாக விளம்பரப் படுத்தப்படுவதாகவும், அலோபதி மருத்துவம் குறித்து சில தவறான தகவல்களை பரப்புவதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இதையடுத்து, இது போன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்படாது என பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், இது போன்ற சில நோய்களை குணமாக்கும் என்பது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகின.


இதையடுத்து, விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டதாக  கூறி, பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பதஞ்சலி நிர்வாகத்திடமிருந்து எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்ட வழக்கில், பதிலளிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது. 


அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீசுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமின்றி, இருவரும் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.