விமானத்தில் சமீப காலமாக பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. விமானத்தில் சிறுநீர் கழிப்பது, சண்டை போடுவது போன்ற பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது  மும்பையில் இருந்து நாகலாந்துக்கு செல்லும் விமானத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


உணவில் பூச்சி


அதன்படி, நேற்று மும்பையில் இருந்து சுமார் நண்பகல் 11 மணியளவில் ஏர் இந்தியா AI671 விமானம் நாகலாந்துக்கு புறப்பட்டது. பிசினஸ் கிளாஸில் பயணம் செய்த மஹாவீர் ஜெயின் என்பவர் உணவு ஆர்டர் செய்தார்.  அவருக்கு சாண்ட்விச், முட்டைக் கோஸ், சிக்கன் டிக்கா ஆகியவை வந்தது. அவருக்கு வந்த உணவில்  பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனே அதனை வீடியோவாக பதிவு செய்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 






இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, ஏர் இந்திய நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதன்படி, ”எங்கள் விமானத்தில் நீங்கள் பயணிக்கும் போது இதுபோன்று நடத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சுகாதாரமற்ற உணவு அளித்ததற்கு மன்னித்து விடுங்கள் எனவும் இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், உங்களது, பயண தேதி, நாள், இருக்கை எண் ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும் எனவும் இது போன்று நடந்ததற்கு மன்னிக்கவும் என்று ஏர் இந்திய நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  இதுபோன்று சமீப காலமாக நடந்து கொண்டு வருவது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


முன்னதாக, கடந்த மாதம் ஏர் விஸ்தாரா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நிகுல் சோலங்கி என்ற பயணி, "ஏர் விஸ்தாரா உணவில் சிறிய கரப்பான் பூச்சி இருந்தது" என்று ட்வீட் செய்துள்ளார்.






பயணத்தின்போது தான் சாப்பிட்ட இரவு உணவின் இரண்டு படங்களை சோலங்கி தலைப்பு ஒன்று வைத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஒரு புகைப்படத்தில் இட்லி, சாம்பார் மற்றும் உப்புமா இருந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஏர் விஸ்தாரா நிறுவனம், "வணக்கம் நிகுல், எங்களின் அனைத்து உணவுகளும் மிக உயர்ந்த தரத்தை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுகின்றன. தயவுசெய்து உங்கள் விமான விவரங்களை நேரடி மெசேஜ் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள். எனவே நாங்கள் நடந்தவற்றை விசாரித்துப் பார்த்து விரைவில் அதைத் தீர்க்க முடியும். நன்றி" என குறிப்பிடப்பட்டிருந்தது.