மருந்து சீட்டுகளை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 


உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறும் நிலையில் மக்களின் வசதிக்காக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என பல கட்டங்களில் நகரங்கள் தொடங்கி கடைக்கோடி ஊர் வரை மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 


ஆனால் அங்கு சென்றால் மருந்துச்சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து நமக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும் வகையில் புரியாத வகையில் இருக்கும். இதனைக் காட்டி மருந்தகங்களில் மருந்து வாங்க சென்றால் அவர்கள் சரியானதை கொடுக்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்படும். அனைத்து மருத்துவர்கள் இப்படி புரியாத முறையில் எழுதவில்லை என்றாலும் சிலர் இன்னமும் மருந்து சீட்டிலும், மருத்துவ அறிக்கையிலும் எழுதி தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். 


ஆனால் மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் நோயாளிகள் தங்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை புரிந்து கொள்ளும் வகையில் பெரிய எழுத்துகளில் தெளிவாக எழுதி கொடுக்க வேண்டும் என உள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கவுன்சில் பலமுறை எச்சரித்தும் உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. 


இதனிடையே ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகன் பாம்பு கடித்து இறந்து விட்டதால் கருணைத் தொகை வேண்டுமென என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக புரிந்துக் கொள்ளும்படியாக இல்லாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. பனிகிரஹி, சம்பந்தப்பட்ட மருத்துவரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி அந்த மருத்துவரும் காணொலி காட்சியில் ஆஜராகி புரியாத அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைக் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஒடிசா அரசுக்கும் சேர்த்து ஒரு உத்தரவையும் பிறப்பித்தார். 


அதாவது, ‘மருத்துவர்கள் அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும். முடிந்தவரை பெரிய எழுத்தில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் அறிக்கைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என நீதிபதி எஸ்.கே. பனிகிரஹி தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காந்தீங்க" - பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!