வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.


ஒரே நாடு ஒரே தேர்தல்:


நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, கடந்தாண்டு உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது.


இந்த குழுவின் முதல் கூட்டம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆறு தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள் மற்றும் 7 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டது.


இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த ஏதுவாக சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பொது மக்களிடம் முன்னாள் குடியரசு தலைவர் தலைமையிலான குழு கருத்துகளை கேட்டுள்ளது.


மக்களின் விருப்பம் என்ன? 


இதுகுறித்து குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனவரி 15ஆம் தேதிக்குள் பெறப்படும் ஆலோசனைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கருத்துகளை குழுவின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (எல்சிஐ) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் அடங்கியுள்ள அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டன. தற்போதுள்ள அரசியலமைப்பின்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் அறிக்கை சமர்பித்தது.


கடந்த 1999-ஆம் ஆண்டு, நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி, அரசியலமைப்பு அமலுக்கு வந்த பிறகு, 1951-52 காலக்கட்டத்தில் மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த நடைமுறை, மூன்று மக்களவை தேர்தலுக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 1967ஆம் ஆண்டு, தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் நடைமுறை தடைப்பட்டது. அரசியலமைப்பு தோல்வி அடைந்ததாகக் கூறி, கடந்த 1959ஆம் ஆண்டு, அப்போதைய கேரள அரசு கலைக்கப்பட்டதன் மூலம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை முடிவுக்கு வந்தது.