கேரள கசவு சேலை என்பது ஓணம் திருவிழாவின்போது மட்டுமல்ல கேரளாவில் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் உடுத்தப்படும் உடைதான். தமிழ்நாடு உட்பட ஓணத்தைக் கொண்டாடும் பல மாநிலங்களிலும் தற்போது அம்மாநில பெண்களால் விரும்பி அணியப்படுவது கேரளா புடவை என்றழைக்கப்படும் கசவுப்புடவை. கசவு சேலை என்றும் அழைக்கப்படும் கேரள பாரம்பரிய சேலை, அம்மாநிலத்தில் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களின்போது பெண்கள் விரும்பி அணியும் உடைகளில் ஒன்றாக உள்ளது.

பொதுவாக வெள்ளை அல்லது கிரீம் வண்ணத்தில் வரும் இந்த சேலைகளின் பார்டர்கள் தங்க நிறத்தில் இருப்பது வழக்கம். எமரால்டு பச்சை போன்ற பலருக்கும் பிடித்த வண்ணங்களும் அதில் பயன்படுத்தப்படுகின்றன, இருப்பினும் தங்க நிறம் பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.

கேரள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆவணி மாதம் - அஸ்தம் நாளில் தொடங்கும் இந்த பண்டிகை, திருவோணம் வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது, பெண்கள் வழக்கமான வெள்ளை மற்றும் தங்க நிற சேலைகளை உடுத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை, கேரளாவை அலங்கரித்ததாக நம்பப்படும் விஷ்ணுவின் வாமன அவதாரத்திற்கு மரியாதை செலுத்துவதாக நம்பப்படுகிறது.

கசவு சேலை என்பது கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி. இது பல நூற்றாண்டுகளாக கேரளாவின் வரலாற்றில் வேரூன்றி உள்ளது. கடந்த காலத்தில், கசவு சேலையின் நூல்கள் செழிப்பு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தைக் குறிக்கும் தூய தங்கத்தால் நெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில், தங்கம் அரிதாகி, விலை உயர்ந்ததால், கைவினைஞர்கள் தங்கம் மற்றும் செம்பு-பூசிய வெள்ளி நூல்களின் கலவையாக மாறின. இருப்பினும் சேலைகளின் அடையாளமான தங்க நிறத்தை விடாமல், தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்தாண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த மாதம் இறுதியில் துவங்கி, செப்., 5ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.

பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கசவு, குத்தாம்புள்ளி புடவைகள், திசு, புல்காரி, செட் முண்டு, வேட்டி போன்றவை கோவை வடவள்ளி பகுதியில் உள்ள, நுாலாடை நிறுவனத்தில் ஜரூராக தயாராகி வருகிறது. இந்த நிலையில் கோவை சிறுவாணி சாலையில் அமைந்துள்ள, நுாலாடை கைத்தறி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கேரள பாரம்பரிய ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு மட்டுமின்றி ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குள் அனுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து நுாலாடை தயாரிக்கும் நிறுவனம் சார்பில் கூறும்போது, எம்.கே.பேப்ரிக் என்ற பெயரில், 25 ஆண்டுகளாக கேரள பாரம்பரிய ஆடைகளை தயாரித்து வருகிறோம். நுாலாடை என்ற பெயரில், 2022 முதல்இணையதளம் வாயிலாக நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். கேரளாவில் மொத்த வியாபாரிகள் இங்கு இருந்தே ஆடைகளை வாங்கி செல்கின்றனர். ஓணம் பண்டிகைக்கு தற்போது உற்பத்தி ஜரூராக நடந்து வருகிறது.

பாரம்பரிய ஆடைகள் மட்டுமின்றி, தற்போது இளம் பெண்கள் விரும்பும் வகையில், புதுவிதமாக கலை நயமிக்க ஓவியங்கள் பிரிண்ட் செய்தும், எம்பிராய்டரி செய்தும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பல்வேறு டிசைன்களுடன் நாங்கள் செய்யும், செட் முண்டு அதிகளவில் கேரளாவில் விற்பனையாகி வருகிறது. திருமணத்திற்கு மணப்பெண், மணமகன்களுக்கு தேவைப்படும் கேரள ஆடைகளில் எம்பிராய்டரி செய்து புதிய டிசைன்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களிடம் புடவைகள் 300 முதல், வேட்டிகள் 250 ரூபாய் முதல் விற்பனை செய்துவருகிறோம். வீடுகளில் இருந்து விற்பனை செய்யும் பெண்கள் பலரும், இங்கு துணிகளை எடுத்துச்செல்கின்றனர். மொத்தமாக கேரளாவுக்கு அனுப்புகின்றோம் என்கின்றனர்.