மத்திய அமைச்சர் டூ மாநில அமைச்சர்:


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சர்வதேச அளவில் துப்பாக்கிச்சூட்டில் 25க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். கடந்த 2004ஆம் ஆண்டு, ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்தவர். ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி வந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 2014ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார்.


பாஜக சார்பாக ஜெய்ப்பூர் ரூரல் மக்களவை தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். மத்தியில் அரசியல் செய்து வந்த இவரை, மாநில அரசியலுக்கு அனுப்பியது பாஜக மேலிடம்.


மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பலரை மாநில தேர்தலில் போட்டியிட வைத்தது பாஜக தலைமை. அதன்படி, நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் ஜோத்வாரா தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற போதிலும், பல நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்தது.


இச்சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக முதல்முறை எம்எல்ஏ-வான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக அறிவித்தது பாஜக. அவருடன் தியா குமாரியும், பிரேம் சந்த் பைரவாவும் துணை முதலமைச்சரா பதவியேற்றனர். இருப்பினும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.


இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஒலிம்பிக் நாயகன்:


தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுபெற உள்ள நிலையில், இன்று 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்த ரத்தோர், மாநில அமைச்சராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.


ரத்தோரை தவிர கிரோரி லால் மீனா, மதன் திலாவர், கஜேந்திர சிங் கிம்சர், பாபுலால் காரடி, ஜோகரம் படேல், சுரேஷ் சிங் ராவத், அவினாஷ் கெலாட், ஜோரராம் குமாவத், ஹேமந்த் மீனா, கன்ஹையா லால் சௌத்ரி, சுமித் கோதாரா உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


சஞ்சய் சர்மா, கௌதம் குமார், ஜபர் சிங் கர்ரா, சுரேந்திர பால் சிங், ஹிராலால் நகர் உள்ளிட்டவர்களுக்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சு பாக்மர், விஜய் சிங் சவுத்ரி, கே.கே.பிஷ்னோய், ஜவஹர் சிங் பேடன், ஓதாரம் தேவசி ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


இதையும் படிக்க: "இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை" ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா