ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், ரயிலை இயக்கிய ஓட்டுநர்களின் நிலை என்ன என்பது அனைவரின் கேள்வியாக இருந்தது வந்தது. தற்போது அது குறித்து தகவலும் தெரிய வந்துள்ளது.

Continues below advertisement


ரயிலை இயக்கிய ஓட்டுநர்களுக்கு நடந்தது என்ன?


விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களின் ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டு தற்போது வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் சரக்கு ரயிலின் என்ஜின் டிரைவர் மற்றும் பாதுகாவலர் காயமின்றி உயிர் தப்பினர் என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.


தென்கிழக்கு ரயில்வேயின் காரக்பூர் கோட்டத்தின் மூத்த கோட்ட வணிக மேலாளர் ராஜேஷ் குமார் இதுகுறித்து பேசுகையில், "ரயிலை இயக்கிய லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் காவலாளி மற்றும் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் காவலாளி ஆகியோர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அதே பாதையில் வந்த சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான ரயில் மீது மோதியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 


"யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை"


உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.