ஒடிசா ரயில் விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். 


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக மாநில, தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிசாவில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மேலும் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்த ரயில் விபத்தில் இதுவரை இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க பாலசோரில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.