ஒடிசா மாநிலத்தில் 32 வயதான நபர் தனது மனைவி முன்னிலையில் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான பஹிர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் தனது 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஹிருக்கு, சங்கீதா என்ற திருநங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. 


இதையடுத்து, பஹிர் தனது மனைவிக்கு தெரியாமல் சங்கீதா என்ற திருநங்கையுடன் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பஹிர் மனைவிக்கு தெரியவந்ததும், முதலில் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தன் தலைவிதி இதுதான் என்று தனது கணவனுக்கும் திருநங்கைக்கும் திருமணம் செய்துவைத்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழவும் அனுமதித்தார்.


செபகாரி கின்னர மகாசங்கத் தலைவர் காமினி என்பவரால், நார்லாவில் உள்ள ஒரு கோயிலில் பல திருநங்கைகள் முன்னிலையில் முழு சடங்குகளுடன் நடந்த 'திருமணம்'  ஏற்பாடு செய்யப்பட்டது.


இதுகுறித்து காமினி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் இந்த திருமணத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அவர்கள் வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறோம். இது இரு காதலர்களின் விருப்பத்தாலும், மனைவியின் சம்மதத்தாலும் நடைப்பெற்ற திருமணம்” என்று தெரிவித்தார். 


இந்து மதத்தில் முதல் திருமணம் சட்டப்பூர்வமாக பிரிந்தால் மட்டும், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். இல்லையெனில் அந்த திருமணம் சட்டவிரோதமாக கருதப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அந்த நபரின் மனைவியோ அல்லது வேறு எந்த தரப்பினரோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


இதுகுறித்து, நர்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதர் மெஹர் கூறுகையில், திருமணம் தொடர்பாக மூன்றாவது நபர் புகார் அளித்தால், அந்த நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், நாங்கள் மூவரும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த நபரின் முதல் மனைவி தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.