தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டு விபத்துக்கள் மரணம் மற்றும் தற்கொலை அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டவை.


கொரோனா பெருந்தொற்று காலம் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்த புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் தற்கொலை அதிகரித்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விகிதம் 21.2 சதவீதம் நபர்களாக அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர், ஊதியம் பெறுவொர் 16.5 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தினசரி கூலி பெறுபவர்கள் 15.67 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற நபர்கள் 11.9 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வேலையில்லாத பட்டதாரிகள் 11.65 சதவீதம் நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


இந்த தரவுகள் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துல்லியமாக கூற வேண்டுமென்றால் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் உயிரிழந்துள்ளனர். 1967ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் அதிகளவிலான தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஆகும்.





2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தற்கொலை விகிதம் ஆண்டுதோறும் 7 சதவீதம் மற்றும் 8 சதவீதமாக ஆண்டுதோறும் பதிவாகி வந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொண்டவர்களின் 26.1 சதவீதம் மற்றும் 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.


தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், விபத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 21 நபர்கள் உயிரிழந்தனர். கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதாவது, 2020ம் ஆண்டு 3 லட்சத்து 74 ஆயிரத்து 397 நபர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா காலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இணையவழி வகுப்பை அறிமுகம் செய்தன. இந்த இணையவழி வகுப்புகளினால் மாணவர்கள் பலரும் பெரிதும் சிக்கல்களை சந்தித்தனர். சில மாணவர்களின் பெற்றோர்களால் கொரோனா நெருக்கடி காலத்தில் போதியளவு வருமானம் இல்லாத சூழலில் செல்போன்கள் வாங்க இயலாமலும், பல மாணவர்கள் சரியான நெட்வொர்க் வசதியில்லாமலும் என எண்ணற்ற சிக்கல்களை சந்தித்தனர். சில மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தை இந்த கொரோனா காலத்தில் சந்தித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண