தேசிய மனிதவுரிமை ஆணையத்தின் எட்டாவது தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.மிஸ்ரா எனப்படும் அருண் குமார் மிஸ்ரா புதன் அன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். இவரின் நியமனம் கடும் சர்ச்சைக்கு இடையே நடந்து முடிந்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஏ.கே.மிஸ்ராவின் நியமனத்தை விமர்சனம் செய்திருக்கின்றனர்.




அப்படி என்னதான் செய்துவிட்டார், திருவாளர் மிஸ்ரா?

மத்தியப்பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனாகப் பிறந்த ஏ.கே.மிஸ்ரா, 23 வயதில் வழக்குரைஞராகப் பதிவுசெய்துகொண்டார். மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளையில் 1999வரை வழக்குகளை நடத்தியவர், இடையில் சட்டக்கல்லூரி விரிவுரையாளராகவும் 1991 முதல் ஐந்து ஆண்டுகள் குவாலியர், ஜிவாஜி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் ஆசிரியராகவும் வேலைசெய்துள்ளார். தந்தை, உயர் நீதிமன்ற நீதிபதி ஆயிற்றே.. அவரின் வளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.


வழக்குரைஞராகப் பதிந்து 12ஆவது ஆண்டில் பார் கவுன்சில் உறுப்பினராவது அவ்வளவு சாதாரண காரியமா.. என்ன? 1989, 95 என இரண்டு முறை அதன் உறுப்பினராக இருந்தது மட்டுமில்லாமல், 92-95 காலகட்டத்தில் பார் கவுன்சில் துணைத்தலைவர் பதவியிலும் இருந்துள்ளார். அடுத்து என்ன அகில இந்திய பார் கவுன்சில்தான்..!

1997-98 காலகட்டத்தில் இந்திய பார் கவுன்சிலின் துணைத்தலைவராகவும் ஆனார். 98 மே 15ஆம் தேதி முதல் 99 அக்டோபர் 24வரை தலைவராகவும் இருந்தார், ஏ.கே.மிஸ்ரா. பெங்களூர் தேசிய சட்டப்பள்ளியிலும் பார் கவுன்சிலின் கல்விக் குழு முதலிய பல்வேறு குழுக்களிலும் இடம் பிடித்தார்.
இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக, 1999 அக்டோபரில் ம.பி. உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார்.


பிறகு, ராஜஸ்தான், கொல்கத்தா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி பதவிகளிலும் இருந்தார், ஏ.கே. பிறகு, 2014 -ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி உயர்த்தப்பட்டார்.  


இவ்வளவு ’பெருமை’களைக் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.மிஸ்ரா, 27 ஆண்டு கால மரபுக்கு மாறாக, மனிதவுரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு சட்டத்தடை ஏதும் இல்லை. இருந்தது..இப்போது இல்லை!

ஆம், மனிதவுரிமை ஆணையத் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரைத்தான் நியமிக்கவேண்டும் எனக் கூறிய மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை 2019-ல் திருத்தி அமைத்துவிட்டார்கள். எப்படி..? உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய ஒருவரை ஆணையத் தலைவராக அமர்த்தலாம் என்பதுதான் அந்தத் திருத்தம். அதுவே இப்போதைய நியமனத்துக்கு அடிகோலியிருக்கிறது.


இது ஒரு பக்கம் இருக்க, தேர்வுக் குழுவில் அரசுக்கு மாற்றான ஒரே பிரதிநிதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பட்டியல் சமூகத்தவரின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும்; அதற்கேற்ப இந்தத் தேர்வு அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்படி ஒரு சட்டப்பிரிவு இல்லையென பதில் கூறப்பட்டுள்ளது. மனிதவுரிமை ஆணையத்துக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை, சமூகரீதியான பிரச்னைகள்தான் என்பதையும் அவர் அழுத்தமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார்.




அதன் பிறகும் அவர் சொல் அம்பலம் ஏறவில்லை. தேர்வுக்குழுவில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அவரின் குரலுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பே இருக்காது என்பதை மத்திய அரசுத் தரப்பில் உணர்த்திவிட்டார்கள். 

ஆனாலும் கார்கே தன்னுடைய கருத்தை அரசுக்குப் பதியவைக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டார்.
 
முக்கியமான ஒரு சேதி, 2020 பிப்ரவரியில் பிரதமர் மோடியை அப்போது பணியிலிருந்த ஒரு நீதிபதி, ஆகா ஓகோவெனப் புகழ்ந்து நாட்டின் நீதித்துறைக்கு அதிர்ச்சியூட்டினார். அண்மைக்காலமாக நீதித்துறையில் அரங்கேறிவரும் பல அதிர்ச்சிகளில் ஒன்றாக அதுவும் அமைந்தது. அந்த ’நீதிமான்’தான் இப்போதைய மனிதவுரிமை ஆணையத் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.
இவருக்கு முன்னால், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஐந்து பேர் இந்தப் பதவியில் நியமிக்கப்படக்கூடிய வரிசையில் இருக்கின்றனர். அவர்களில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட பிரபல ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.