மத்திய அரசு நாடாளுமன்றத்தில் யாரிடமும் கருத்து கேட்காமல் நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது. இதனால் அதிர்ச்சியும்,  ஆத்திரமும் அடைந்த விவசாயிகள் கடந்த ஒருமாத காலமாக டெல்லியில் அற வழியில் தொடர்ந்து போராடிவந்தனர். இந்த போராட்டத்தில் 750 க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரையும் பலிகொடுத்தனர். 


இந்த சூழல் இப்படி இருக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருள்களைச் சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 


மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடிவரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். 



பிரதமரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து நன்றியும், பாராட்டும் குவிந்தன. ஆனால் கங்கனா ரணாவத்தோ, 'இது வெட்கக்கேடான செயல்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 


காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷுவால் நசுக்கினார். இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணையம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளைக் காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப்போன்ற ஒருவர் அவர்களுக்குத் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். 


இவரின் இந்த பதிவை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அவர் தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில், கங்கனாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாக தெரிவித்து டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கனா மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில்,  நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண