உலகில் பல்வேறு விதமாக அடக்குமுறைகள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இன ரீதியாகவும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சாதிய ரீதியாகவும் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் விதமாக பல நூற்றாண்டுகளாக பாலின ரீதியாக ஒடுக்குமுறை நிகழ்கின்றன. சமீப காலமாகத்தான், சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் அவை களையப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள்:
பெண்களை முன்னேற்றும் விதமாக இந்தியாவில் அரசின் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை நாடு முழுவதும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் பெண்களுக்கான தென்னை நார் திட்டங்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் முத்ரா கடனுதவி திட்டங்கள் பெண் தொழில்முனைவோருக்கு பெருமளவில் பயனளித்து வருகின்றன. இதை தவிர, பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள்/முயற்சிகளும் உள்ளன. இதில் மகிளா உதயம் நிதி யோஜனா, தேனா சக்தி திட்டம், பெண் தொழில்முனைவோருக்கான ஸ்த்ரீ சக்தி தொகுப்பு மற்றும் சென்ட் கல்யாணி திட்டம் போன்றவை அடங்கும்.
மத்திய அரசு தகவல்:
இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்படுத்தக் கூடிய மாற்றத்தை அங்கீகரித்து, மகளிர் தொழில்முனைவோர்களை வளர்க்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 73000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டு இயங்கி வருகின்றன. இது புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் பெண்களின் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுகிறது.