ஐந்து நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துதல், அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல அம்சங்களை கோரி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.


இந்தநிலையில், மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று போராட்டம் அறிவித்த சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சமரச பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, திட்டமிட்டப்படி வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பணியாளர் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் கூறியதாவது, “சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார். 


5 நாட்கள் :


குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நாளை முதல் வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும் 31ம் தேதி (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினங்களில் தமிழக முற்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 


அத்துடன் குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி, 4வது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும் மறுநாள் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும்.


இடையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.  வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


கோரிக்கைகள்


ஒன்பது வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் ஒரு குடை அமைப்பான UFBU, இந்த வார தொடக்கத்தில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், கோரிக்கைகளின் தீர்வுக்காக அதன் போராட்டத்தை புதுப்பிக்க முடிவு செய்தது. UFBU, ஊதிய திருத்தம், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் எஞ்சிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளின் சாசனம் பற்றிய பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கோருகிறது.


UFBU வேலைநிறுத்தம்


UFBU ஜூன் மாதம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, ஆனால் இந்திய வங்கிகள் சங்கம், தலைமை தொழிலாளர் ஆணையரால் அழைக்கப்பட்ட ஒரு சமரசக் கூட்டத்தில், விவாதங்களை நடத்த ஒப்புக்கொண்டதை அடுத்து அதை ஒத்திவைத்தது. ஆட்சேர்ப்புக்கான கோரிக்கை குறித்து, UFBU கன்வீனர் சஞ்சீவ் கே. பண்ட்லிஷ், அனைத்து கேடர்களிலும் உள்ள பெரும்பாலான கிளைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை உள்ளது என்றார்.


பணிச்சுமை அதிகம்


காலிப் பணியிடங்களை நிரப்ப வங்கி நிர்வாகங்கள் போதிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இதன் காரணமாக தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்து, "ஊழியர்களின் விரக்திக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது" என்றார்.