Maternity leave : மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கேரள பல்கலைக்கழகம் பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.  


மகப்பேறு விடுப்பு


பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என பல்வேறு முன்னெடுப்புகளுக்கு கேரளா முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.  அந்த வகையில் முதல் முறையாக பல்கலைக்கழக மாணவிகள் தங்களின் மகப்பேறு நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  மகப்பேறு விடுப்பு தொடர்பாக கேரள பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.


ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு எழுத மகப்பேறு விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு 76 சதவீத வருகை பதிவு இருந்தால்  போதும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக கேரளா பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மகப்பேறு விடுப்பு முடிந்து மாணவர்கள் மீண்டும் தங்கள் வகுப்புகளை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள். மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் மருத்துவ சான்றிதழ்களை கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.


மருத்துவ சான்றிதழ்கள் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் மீண்டும் வகுப்பில் சேர அனுமதிக்கப்படும்" என்றார். கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க வேவண்டும் என தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில், அதற்கு கேரளா பல்கலைக்கழகம் செவி சாய்த்துள்ளது.


முன்னதாக, ஜனவரி மாதத்தில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. வருகைப் பதிவேட்டில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், மாதவிடாய் விடுப்புக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு செமஸ்டர் வகுப்புக்கும் 2 சதவீத கூடுதல் விடுப்பு, மாதவிடாய் நாட்களுக்காக ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


தற்போது 75 சதவீத வருகைப் பதிவேட்டைக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே செமஸ்டர் தேர்வை எழுத முடியும். அதைவிடக் குறைவான வருகைப் பதிவேடு கொண்டிருப்பவர்கள் துணை வேந்தருக்குக் கடிதம் எழுதவேண்டியது கட்டாயம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும், கேரள அரசின் உயர்கல்வித்துறை, அரசு துறையுடன் இணைந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்புக்கான நாட்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Video : ஹெலிபேடில் பிளாஸ்டிக் குப்பைகள்… முன்னாள் முதல்வர் எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க திணறிய காட்சி