மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்  மீது பாலியல் புகார் கூறிய நிலையில் இந்த சர்ச்சை குறித்து விசாரணையை மேற்பார்வை செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இந்திய குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணையை மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்துள்ளது.


ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், தயான்சந்த் விருது பெற்ற திருப்தி முர்குண்டே, சாய் உறுப்பினர் ராதிகா ஸ்ரீமன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன் (ஓய்வு) ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் ஒரு மாதத்திற்கு இந்தக் குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். 


பாலியல் புகார்


பஜ்ரங் புனியா, வினேஷ் போகர் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் ஜன.18ஆம் தேதி காலை இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடக்கத்தில் எதற்காக நடைபெற்றது என்று தெரியவில்லை. 


ஆனால் தொடர்ந்து மாலை 4 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பல மல்யுத்த பெண்கள் வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.


இன்று இந்த உண்மையை நான் வெளியே சொல்கிறேன். ஆனால், நாளை நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தெரியாது. என்னுடன் அமர்ந்திருக்கும் சில பெண் மல்யுத்த வீராங்கனைகளும் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை. மல்யுத்தத்தை காப்பாற்ற போராடுகிறோம்.


மன ரீதியாக தொல்லை


இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் நான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என்று வினேஷ் போகட் கூறினார். "எனக்கு தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. பிரிஜ் பூஷன் சரண் சிங் நான்கு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர்கள் மீது புகார் வரும்போதெல்லாம் நேராக சென்றால் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.


அதேபோல், பயிற்சியாளர்கள் எங்களை தினமும் சித்திரவதை செய்கிறார்கள். பயிற்சியாளரின் அனுமதி இல்லாமல் மல்யுத்த வீரர்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “மல்யுத்த வீரர்களுக்கு ஸ்பான்சர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. மல்யுத்த வீரர்களை சென்றடைய வேண்டிய நிதி உதவி அவர்களை சென்றடையவில்லை. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கும் மல்யுத்த வீரர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.


இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக யாரும் எதுவும் கூற முடியாது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்” என பஜ்ரங் புனியா தெரிவித்திருந்தார்.


விளையாட்டுத்துறையில் இந்தப் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கடந்த சில நாள்களாக கவனமீர்த்து வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்ததை அடுத்து தங்கள் போராட்டத்தை வீரர்கள் கைவிட்டனர்.