மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏக்கள் 46 பேர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவின் குதிரை பேரத்தில் விலை போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


முன்னதாக எம்.எல்.ஏக்களுக்கு தான் முதலமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை என்றால் பதவி விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அறிவித்த நிலையில், முதலமைச்சர் இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்து ஜூன் 22ஆம் தேதி இரவு தன் குடும்பத்துடன் உத்தவ் தாக்கரே வெளியேறினார். 


சரத் பவார் கருத்து


பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏக்கள் தற்போது பாஜக ஆளும் அஸ்ஸாமில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  சிவசேனா கூட்டணியில் உள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் முன்னதாகக் கூறியதாவது:


”சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் குஜராத்திலும், சிலர் அசாமிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜக ஆளும் மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது நமக்குத் தெரியும். அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் யாருக்கு பெரும்பான்மை என்பது தெரிந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.


குரல் கொடுத்த மம்தா 








மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்து முன்னதாகப் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவும் ஆட்சியில் இருந்து ஒருநாள் சென்றாக வேண்டும் என்றும் அந்தக் கட்சியையும் யாராவது இதேபோல் உடைக்கலாம் எனவும் தெரிவித்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பாண்மைக்கு 144 இடங்கள் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ’மகா விகாஸ்’ என்ற கூட்டணியில் 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தது.


முன்னதாக இக்கூட்டணியின் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்த நிலையில், 144 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவை. இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக திரண்டுள்ளனர்.  இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 131 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை.


தமக்கு 135 பெரும்பான்மை இருப்பதாக பாஜக கூறி வருகிறது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 2 இடங்களே அதிகம். இது 27 இடங்களை கொண்டுள்ள மற்றவை ஆதரித்தால் மட்டுமே சாத்தியம் . ஆனால் சிவசேனா கட்சியில் இருந்த 21 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இது சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு மிக சிக்கலான காலமாக கருதப்படுகிறது.