மிருகத்தனமான தாக்குதல்:


மத்திய பிரதேசத்தில் 24 வயது இளைஞர் ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கிய நபரின் வீட்டை புல்டோசரை கொண்டு காவல்துறையினர் இடித்து தள்ளியுள்ளனர். சமூக வலைதளங்களில் மனதை உலுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில், திடீரென்று அந்த நபர் இளம் பெண்ணை அறைந்து, அவருடைய தலைமுடியைப் பிடித்து, தரையில் கீழ் தள்ளி தாக்குகிறார்.


கொஞ்சம் கூட இரக்கமின்றி அந்த பெண்ணின் தலை மீது காலை வைத்து அவர் உதைக்கிறார். சில நிமிடங்களிலேயே அந்த பெண் மயக்கம் அடைந்து விடுகிறார். இதை தொடர்ந்து, பல மணி நேரமாக, அவர் சாலையிலேயே மயக்க நிலையில் கிடந்துள்ளார். புதன்கிழமை அன்று மௌகஞ்ச் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 


 


இருவர் மீதும் ஐடி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளி பங்கஜ் திரிபாதி மற்றும் வீடியோ பதிவு செய்த நபரை கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் இருந்து பங்கஜ் திரிபாதி சில நாட்களிலே பிடிபட்டார். தற்போது இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெண்ணின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அந்த பெண் தன்னுடைய காதலை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதையடுத்து, கோபம் அடைந்த திரிபாத அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.


சாலையோரத்தில் மயங்கி கிடந்த பெண்ணை அப்பகுதி மக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.


 






இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடு:


சமீப காலமாகவே, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீட்டை புல்டோசரை பயன்படுத்தி பா.ஜ.க. அரசு இடிப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், இளம்பெண்ணை தாக்கிய நபரின் வீட்டை காவல்துறையினர் இடித்து தள்ளியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட திரிபாதியின் வீட்டை இடிக்க மாவட்ட நிர்வாகம் புல்டோசரை அனுப்பியுள்ளது. வீடு முற்றிலுமாக இடித்து தள்ளும் வரை, அங்கு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.


திரிபாதி, ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் திரிபாதி மீது நடவடிக்கை எடுக்காத உள்ளூர் போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.