உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் சனிக்கிழமை அன்று 18 வயது இளம்பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு பின்னர், நகரின் மத்திய பகுதியில் உள்ள சாலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆட்டோவில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.


டியூஷன் முடிந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோவில் சென்ற இளம்பெண், ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். டிரைவரின் உதவியாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை ஒரு இடத்தில் விட்டு சென்றுள்ளார். தன்னை விட்டுச் சென்ற இடத்திற்கு அருகில் ஒரு போலீஸ் வேனைக் கவனித்த அவர் உதவிக்காக அவர்களை அணுகி உள்ளார். முதற்கட்ட விசாரணையை அடுத்த, அந்த இளம்பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிட்டு, மறுநாள் புகார் அளிக்கும்படி காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.


ஆட்டோ டிரைவர் நடுவழியில் வேறு பாதையில் சென்றதாகவும் அவர் கத்த ஆரம்பித்த பிறகும் அவர் ஆட்டோவை நிறுத்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தலையில் அடிக்கப்பட்டு, அவரது தொலைபேசியைப் பறிக்கப்பட்டு, மூன்று மணிநேரம் மாறி மாறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். 


அவர் வாகனத்திலிருந்து தள்ளப்படுவதற்கு முன்பு அவர்கள் எரிவாயு நிரப்புவதற்காக ஒரு எரிபொருள் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய பல குழுக்களை அமைத்துள்ளனர்.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) பிராச்சி சிங் கூறியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அவரது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 


19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.


கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.


டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.