ஈரான் போர் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியா பெரிய அளவில் எல்பிஜிக்கு வளைகுடா நாடுகளை சார்ந்திருப்பதே இதற்கு காரணம். போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கேஸ் கப்பல்கள் எதுவும் இந்தியா வந்தடைய முடியவில்லை.

Continues below advertisement

இந்தியா கச்சா எண்ணெய்க்கும் வளைகுடா நாடுகளை தான் சார்ந்துள்ளது. ஆனால் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதற்கு காரணம் இந்தியா கணிசமான அளவு கச்சா எண்ணெய் வாங்கி சேமித்து வைத்துள்ளது. சிக்கலான ஒரு காலம் ஏற்பட்டு வெளியில் இருந்து கச்சா எண்ணெயே கிடைக்காது என்ற சூழலில் இந்த சேமிப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் எடுத்து பயன்படுத்தப்படும். கச்சா எண்ணெய் போல இந்தியாவில் கேஸ் சேமிப்பிற்கான கிடங்குகள் இல்லை. இதனால் தான் ஈரான் போரால் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை சரி செய்ய மத்திய அரசு 42 பில்லியன் டாலர் முதலீட்டில் கேஸ் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம்.

Continues below advertisement

இந்த திட்டத்திற்கு நிதி திரட்ட எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் பெற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அவசரகால தேவைகளுக்காகவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் 42 பில்லியன் டாலர் அதாவது சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் எரிபொருள் சேமிப்பு (Strategic Fuel Reserve) கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவோரிடம் இருந்து புதிய வரிகளை விதிக்க பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி வழக்கமாக நாம் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது செலுத்தும் கட்டணத்தில் கூடுதலாக ஒரு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பெட்ரோலிய அமைச்சகம் ஒரு கிலோ எல்பிஜிக்கு 1.29 ரூபாய் என்ற அளவில் வரி விதிக்க ஆலோசித்து வருகிறதாம். இந்த வரி நடைமுறைக்கு வந்தால், வழக்கமான ஒரு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு நாம் கூடுதலாக 18 ரூபாய் வரியாகவே செலுத்த நேரிடும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு 460 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என கணக்கிடப்படுகிறது.

மொத்தமாக சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயுக்கு கூடுதல் வரி விதித்து அரசு ஓராண்டில் 1.5 பில்லியன டாலர் வரை வருமானம் பெறும். இதனை கொண்டு கேஸ் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவது பராமரிப்பது போன்ற செலவுகளை மேற்கொள்ள இருக்கிறது. சர்வதேச அளவில் எதிர்பாராத புவிசார் அரசியல் நெருக்கடிகள் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்த கேஸ் சேமிப்பு கட்டமைப்பு மிகவும் அவசியம்.

இந்த திட்டத்திற்கு தேவையான நிதிச்சுமையை அரசே முழுமையாக ஏற்பதற்கு பதிலாக, பொதுமக்கள் மீது சிறிய அளவிலான கட்டணங்களை விதித்து அதன் மூலம் நிதியை திரட்டலாமா என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.