அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், அதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் வணிக மற்றும் வீட்டு உபயோக் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
எஸ்மா சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு
மத்திய கிழக்கில், அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதனால், நாடு முழுவதும் ஹோட்டல்கள் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதிலுமே, ஹோட்டல்களின் நேரம் மற்றும் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக, அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடை சட்டமான எஸ்மா சட்டத்தை அமல்படுததியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றின் பதுக்கலை தடுக்கவும், கள்ளச் சந்தை விற்பனையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிலிண்டர்களை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை
இந்த அத்தியாவசிய பதுக்கல் தடை சட்டம் 1955-ன் மூலம், சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால், 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த எஸ்மா சட்டம், உணவு, எரிபொருள், மருந்து ஆகியவை பதுக்கலுக்கும் பொருந்தும்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மேலும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமின்றி, வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க, ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 21-லிருந்து 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை, மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
