நான் வாழ்க்கையில் எந்த தவறும் செய்ததில்லை என கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

2026ம் ஆண்டு கேரளம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வர இடதுசாரி கட்சிகள் முழு மூச்சில் களப்பணியாற்றி வருகின்றன. இப்படியான நிலையில் கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கிய நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அதன்  வீடியோ வெளியாகியுள்ளது. 

அதில் பேசும் பினராயி விஜயன், “அரசியல் மற்றும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை புன்னகையுடன் எதிர்கொள்ள முடிகிறது என்றால் நான் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யவில்லை என்பது தான் காரணம்” என கூறினார். மேலும் எமர்ஜென்ஸி அமல்படுத்திய காலக்கட்டத்தில் தான் பட்ட கொடூரமான போலீஸ் தாக்குதல், சிறையிலிருந்த மோசமான இரவுகள் என அனைத்தும் பயங்கரமானவையாக இருந்தது. எனினும் நான் நீண்டகாலமாக அந்த இரத்தக்கறை படிந்த சட்டையை வைத்திருந்தேன். இப்போது அது என்னிடம் இல்லை. நான் இளமையாக இருந்ததால் காவல்துறையினரின் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடிந்தது. 

ஆனால் நான் உள்துறை அமைச்சரானதில் இருந்து சிறை தாக்குதல்களை ஊக்குவிப்பதில்லை. அப்படி செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற புகார்கள் வந்தால் உடனடியாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளை நான் காவல்துறையினர் விசாரிக்க அனுமதிப்பதில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார். 

அரசியலில் தனிப்பட்ட அரசியல் குற்றச்சாட்டு மற்றும் அவதூறுகளை எதிர்கொள்வது பற்றி பேசிய பினராயி விஜயன், “ மனம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும், குற்ற உணர்வு இருக்கக்கூடாது. எந்தவொரு விஷயத்தில் நாம் தவறு செய்திருந்தால் குற்ற உணர்ச்சியை அனுபவிப்போம். தவறு செய்யவில்லை என்றால் எப்படியான குற்றச்சாட்டையும் புன்னகையுடன் எதிர்கொள்ள முடியும்” என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

எனக்கு கேரளத்தில் எங்கோ நிலங்களும் வீடுகளும் இருப்பதாகவும், சிங்கப்பூரில் கமலா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. பொதுவாக நான் கட்சிக்கு அடிபணிபவன். வாழ்க்கையில் எதற்கும் பயப்பட மாட்டேன். கட்சிக்கான பொதுவான நிலைப்பாடுகள் என்பது உள்ளது. அந்த நிலைப்பாடுகளில் சிறிய வித்தியாசம் கூட இருக்கக்கூடாது என நான் நினைப்பேன். அப்படி எதுவும் வந்து விடக்கூடாது என்ற பயத்தில் தான் வாழ்கிறேன். அதைத் தவிர எந்த பயமும் என்னைப் பாதிக்காது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.