Just In





கட்டுக்கடங்காத யானை.. தலைத்தெறிக்க ஓடிய பக்தர்கள்.. கேரள கோயில் திருவிழாவில் பரபரப்பு!
கேரளா மனகுளங்கரா கோயிலில் பட்டாசு வெடித்தபோது யானைக்கு மதம் பிடித்துள்ளது. இதனால் கட்டுக்கடங்காத யானை, அங்கிருந்த பக்தர்களை தாக்கியது.

கேரளாவில் கோயில் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனகுளங்கரா கோயிலில் பட்டாசு வெடித்தபோது யானைக்கு மதம் பிடித்துள்ளது. இதனால் கட்டுக்கடங்காத யானை, அங்கிருந்த பக்தர்களை தாக்கியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோயில் திருவிழாவில் பரபரப்பு:
கேரள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மனகுளங்கரா கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. கோயில் திருவிழாவிற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள், பட்டாசு வெடித்ததால் சினம் கொண்டன. சில நொடிகளில், யானைகள் வெறித்தனமாக ஓடியுள்ளன.
அவை, முதலில் ஒன்றையொன்று மோதிக்கொண்டன. பின்னர், கோயில் சன்னதிக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் மோதின. இதில், கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. சிலர் அதன் அடியில் சிக்கிக் கொண்டனர். யானைகளிடம் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர். இதில், கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மக்கள் பீதியடைந்தனர். அதன் விளைவாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. மூன்று பேர் இறந்துள்ளனர். பலியான மூன்று பேர் அம்முகுட்டி, லீலா மற்றும் ராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்:
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், கோயிலுக்கு இரண்டு யானைகளை ஊர்வலமாக அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது தெரியவந்தது" என்றார்கள்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "இது ஒரு துயரமான சம்பவம்" என்று குறிப்பிட்டுள்ளார். யானைகள் (மேலாண்மை மற்றும் பராமரிப்பு) விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
"விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: Modi's Rhyming Tweet: மகா... மிகா... மெகா... ரைமிங்கில் ட்வீட் செய்து அசத்திய மோடி...எதை பற்றி தெரியுமா.?