சபரிமலை கோயில்:


கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.  மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். 


இப்படி சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கமான கோயில்கள் போல் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக திறக்கப்படும். நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 


மண்டல பூஜைக்காக நடை திறப்பு:


இந்நிலையில், இந்த  ஆண்டுக்கான  மண்டல பூஜை 17ஆம் தேதியான நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, தந்திரி கண்டார் மகேஷ்வர் மோகன் முன்னிலையில் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். பின்னர், 18ஆம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ முடப்பட்டது. 


பின்னர், நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  அதிகாலை 3.00 மணிக்கு புதிய மேல் சாந்தி பி.என்.மகேஷ் நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்தாண்டுக்கான மண்டல பூஜைக்காலம் தொடங்குகிறது. நாளை முதல் தினமும் அதிகாலை 3.15 மணி முதல் 12 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.  சபரிமலையின் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜைக்காக நாளை முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். 


பலத்த போலீஸ் பாதுகாப்பு:


மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கேரள அரசு பேருந்தில் பம்பை வரை செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7,500  போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.