கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த கேரள லாட்டரி மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்துக்கொண்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 31, 2024 வரை, மாநிலம் ₹41,138.45 கோடி மதிப்புள்ள லாட்டரி விற்பனையைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் 38,577 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள், மேலும் பலர் மறுவிற்பனைக்காக அவற்றை வாங்குகிறார்கள்.
வரி வருவாயாக 11 ஆயிரத்து 518 கோடி ரூபாயும், அரசுக்கு லாபமாக 2 ஆயிரத்து 781 கோடி ரூபாயும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வருவாய் ஈட்டும் முதன்மையான ஆதாரங்களாக லாட்டரிகளும் மதுபானங்களும் செயல்படுகின்றன என்ற விமர்சனத்தை மாநில அரசு அடிக்கடி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.