கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலான நிலையிலும், மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.


இந்திய ராணுவத்திற்கு சிறுவன் எழுதிய கடிதம்: பல சவால்களை கடந்தும் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை, கடினமான நிலபரப்பு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்களக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். வயநாட்டில் ஏ.எம்.எல்.பி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராயன் என்ற சிறுவன் எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராயன். என் அன்புக்குரிய வயநாடு ஒரு பெரிய நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்" என மலையாளத்தில் எழுதியுள்ளான்.


 


சிறுவனின் கடிதத்திற்கு நெகிழ்ச்சி பதில் அளித்துள்ள இந்திய ராணுவம், "உன்னுடைய இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்கள் மனதை தொட்டது. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.


 






உங்கள் கடிதம் இந்த பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.


ஒன்றாக இணைந்து நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம். இளம் வீரரே, உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி" என எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளது.