Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை - முதலமைச்சர் உத்தரவு!
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. சமூக வலைத்தளத்தால் உண்டாகும் புகழ் மோகம் பிறந்த குழந்தைக்கு கூட கணக்கு தொடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய மாநில முதலமைச்சர் சித்தராமையா, மொபைல் போன் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனத்தால் ஏற்படும் உடல்நலம், மன மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விவாதித்த பின்னர் கர்நாடகா அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கவும் இந்த அரசு விரும்புகிறது. சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கு கவனத்தில் கொள்ளக்கூடிய அளவுக்கு மிக கொடூரமானது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகா அரசின் இந்த முடிவு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தால் பாழாகும் சமூகம்
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கணிக்க முடியாத அளவுக்கு சென்று விட்டது. சமூக வலைத்தளத்தால் உண்டாகும் புகழ் மோகம் பிறந்த குழந்தைக்கு கூட கணக்கு தொடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளின் நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவிடப்படுகிறது. லைக்குகள், கமெண்ட்கள் போன்றவை குறைவாக வந்தால் மன அழுத்தத்திற்கு தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நமது அறிவை, தொடர்பை பெருக்கத்தான் ஒழிய அதற்கு அடிமையாகி கிடப்பது இல்லை என்பது மனம் ஏற்க மறுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
உலக நாடுகள் இந்த விஷயத்தை மிக கவனமாக கையாண்டு வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக மாறியது. தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த தடையை அமல்படுத்தியுள்ளது. போர்ச்சுகல், மலேசியா, நோர்வே, கிரீஸ், ஸ்பெயின், டென்மார்க், பப்புவா நியூ கினியா போன்றவை சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை கட்டுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகா மாநிலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவித்திருப்பது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா மிகப்பெரிய வியாபார சந்தை. இங்கு கோடிக்கணக்கான மக்கள் வயது வித்தியாசம் இல்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் கர்நாடகா மாநிலத்தின் நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















