Cauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பசவராஜ் மொம்மை கடிதம் எழுதியுள்ளார்.


நதி நீர் பங்கீடு:


காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் வரையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.  இதனால், தமிழகத்திற்கான நீரை உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடக அரசை, மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  ஆனால் இதற்கான நடவடிக்கை கர்நாடக அரசு முன்வரததால் இன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் மனு:


அந்த மனுவில், ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 28.8 டி.எம்.சி நீரை திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. தற்போது 24 ஆயிரம் கன அடி நீர் விகிதம் தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல வரும் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி நீர் ஆணையத்தையும் ஒரு எதிர் மனுதாரராக இணைத்து உரிய உத்தரவை ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி ஆணையம் பாகுபாட்டோடும், ஒரு தலை பட்சமாகவும் செயல் படக் கூடாது என உத்தரவிட வேண்டும். மேலும், 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.




கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு:



இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் தர கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் மொம்மை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது. கர்நாடகாவின் 4 அணைகளில் இருக்கும் தண்ணீர் பெங்களூரு மற்றும் காவிரி படுகையில் உள்ள கிராமங்களின் குடிநீருக்கே போதுமானதாக இல்லை. எனவே, கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டாம். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


சித்தராமையா விளக்கம்:


இதுதொடர்பாக பேசியிருந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால்  எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என விளக்கம் அளித்திருந்தார்.