சென்னை உயர் நிதிமன்றத்தின் புதிய நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட உள்ளார், 


யார் இந்த முனிஷ்வர் நாத் பண்டாரி?


தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 51 வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள முனிஷ்வர் நாத் பண்டாரி, வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் தனக்கென்ன தனி முத்திரை பதித்தவர். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக முதல் முறையாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2019 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முனிஷ்வர் நாத் பண்டாரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு சவால் நிறைந்த வழக்குகளை சந்தித்து தீர்ப்பெழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சஞ்ஜீப் பானர்ஜி மாற்றமும் சர்ச்சையும்:


கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்ஜீப் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி என்ற அந்தஸ்துடன் அமர்ந்தார்.


தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்று முழுமையாக 11 மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரை தீடீரென உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது. 


ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினர். நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர். ஒருவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டால் அவரை இரண்டு ஆண்டுகள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட முடியாத அளவுக்கு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.


பெரிய நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் அவரது அனுபவம் முழுமையாக பயன்படாது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், பி.எஸ். ராமன், நளினி சிதம்பரம், விஜய் நாராயணன் உள்ளிட்ட 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதினர்.


ஆனால், எதுவும் எடுபடவில்லை. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த சஞ்ஜீப் பானர்ஜி பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால், அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் மாற்றம், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளின் மீது பரந்துபட்ட சந்தேகங்களை உண்டாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.